செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீது இன்று தீர்ப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கோரி 3-வது முறையாக தொடரப்பட்ட வழக்கில், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கிறது. குற்றச்சாட்டு பதிவுக்காக வரும் 22-ம் தேதி அவரை நேரில் ஆஜர்படுத்த உத்தரவிட்ட நீதிபதி எஸ்.அல்லி, அவரது நீதிமன்ற காவலை 15-வது முறையாக நீட்டித்து உத்தரவிட்டுள்ளார்.

அரசு போக்குவரத்து கழகத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்டதாக பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் அடிப்படையில், சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்டத்தின்கீழ் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்த ஆண்டு ஜூன் 14-ம் தேதி கைது செய்தனர். இந்த வழக்கில் செந்தில் பாலாஜிக்கு எதிராக அமலாக்கத் துறை கடந்த ஆகஸ்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. அதன்பிறகு, அவருக்கு ஜாமீன் கோரி 2 முறை தாக்கல் செய்யப்பட்ட மனுக்களையும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. 3-வது முறையாக ஜாமீன் கோரி முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மீண்டும் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதன் மீதான தீர்ப்பு இன்று பிறப்பிக்கப்படுகிறது.

இதற்கிடையே, செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை 15-வது முறையாக ஜன.22 வரை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிபதி எஸ்.அல்லி உத்தரவிட்டுள்ளார்.

செந்தில் பாலாஜி தரப்பில் ஒருசில ஆவணங்கள் கோரிமூத்த வழக்கறிஞர் எஸ்.பிரபாகரன் 2 மனுக்கள் தாக்கல் செய்தார். அன்றைய தினம் குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ள 21 சாட்சிகள் மற்றும் 77 ஆவணங்களை விசாரித்து,செந்தில் பாலாஜி மீதான குற்றச்சாட்டுகளை நிரூபிக்கும் வகையில் வாதங்களை முன்மொழிய உள்ளதாக அமலாக்கத் துறை தரப்பு சிறப்பு அரசு வழக்கறிஞர் என்.ரமேஷ் தெரிவித்துள்ளார். செந்தில் பாலாஜி தரப்பு மனுவுக்கு அமலாக்கத் துறை 22-ம் தேதி பதில் அளிக்க உத்தரவிட்ட நீதிபதி, அன்று குற்றச்சாட்டு பதிவுக்காக அவரை நேரில் ஆஜர்படுத்துமாறு சிறைத் துறைக்கு உத்தரவிட்டார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE