அரசுப் பள்ளிகளில் சமூகநீதி பாடல்: அமைச்சர் அன்பில் மகேஸ் தகவல்

By செய்திப்பிரிவு

சென்னை: அரசுப் பள்ளிகளில் காலை வணக்கக் கூட்டத்தில் இனி சமூகநீதி பாடல் இடம்பெறும் என்று பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

தமிழக அரசுப் பள்ளிகளில்படித்த முன்னாள் மாணவர்களை ஒன்றிணைக்கும் ‘விழுதுகள்’ திட்டத்தின் தொடக்க விழா சென்னையில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் பள்ளிக் கல்வித்துறை சார்பில் உருவாக்கப்பட்ட ‘சமூகநீதி’ உட்பட 10 கருத்துருக்கள் சார்ந்த பாடல்கள் அடங்கிய குறுந்தகட்டை விளையாட்டுத் துறைஅமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டார்.

அதைத்தொடர்ந்து இந்த தொகுப்பில் உள்ள சமூகநீதி பாடலை பள்ளி காலை வணக்கக் கூட்டத்தில் பாடுவதற்கு ஏற்பாடு செய்யுமாறு வேண்டுகோள் விடுத்தார். அதையேற்று இனிவரும் காலங்களில் அரசுப் பள்ளிகளின் காலை வணக்கக் கூட்டத்தில் ‘சமூகநீதி’ பாடல் பாடப்படும். இதற்கான செயல்முறைகள் குறித்த சுற்றறிக்கை விரைவில் அனைத்துப் பள்ளிகளுக்கும் அனுப்பப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE