துணைவேந்தர் தேடல் குழு அறிவிக்கைகளை திரும்பப் பெறுவதாக ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவிப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்தில் உள்ள சென்னை பல்கலைக்கழகம், கல்வியியல் பல்கலைக்கழகம், கோவை பாரதியார் பல்கலைக்கழகம் ஆகிய 3 பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்களை தேர்வு செய்வதற்கு யுஜிசி பிரதிநிதி அடங்கிய குழு அமைத்து வெளியிட்ட அறிவிக்கைகளைத் திரும்பப் பெறுவதாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழக ஆளுநர், சில பல்கலைக்கழகங்களின் வேந்தர் என்ற முறையில் உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் மற்றும் சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய சமீபத்திய தீர்ப்புக்கு உட்பட்டு தமிழக அரசு செயல்படும் என நம்பிக்கை வைத்து, துணைவேந்தர்கள் நியமனத்துக்கான பரிந்துரையை வேந்தருக்கு வழங்கும் மூன்று பேர் கொண்ட தேடல் குழுவுக்கான அறிவிக்கையை திரும்பப் பெறுகிறார். அரசியல் சாசன நீதிமன்றங்களின் தீர்ப்புகளுக்கு ஏற்ப யுஜிசி தலைவரால் முன்மொழியப்படுபவர் உள்ளிட்ட தேடல் குழுக்களை இனி அரசு அமைக்கும் என ஆளுநர் நம்பிக்கையுடன் உள்ளார்.

தமிழக ஆளுநர் மாநில பல்கலைக்கழகங்களின் வேந்தர் என்ற முறையில். பாரதியார் பல்கலைக்கழகம், தமிழ்நாடு ஆசிரியர் கல்விப் பல்கலைக்கழகம், சென்னைப் பல்கலைக்கழகம் ஆகியவற்றுக்கு துணை வேந்தர்களாக நியமனம் செய்ய தகுதியானவர்களைக் கண்டறிய தேடல் குழுக்களை அமைத்து அறிவிக்கை எண் 01, நாள்: 06.09.2023, அறிவிக்கை எண் 02, நாள்: 06.09.2023 மற்றும் அறிவிக்கை எண் 03, நாள்: 06.09.2023 ஆகியவற்றை வெளியிட்டார்.

தமிழக அரசும் சிறப்பு அரசிதழ் எண்.337, நாள்: 13.09.2023, சிறப்பு அரசிதழ் எண்.452, நாள்: 20.09.2023 , சிறப்பு அரசிதழ் எண்.492, நாள்: 19.10.2023 ஆகிய நாட்களில் சென்னைப் பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம், தமிழ்நாடு ஆசிரியர்கள் கல்வி பல்கலைக்கழகம் ஆகியவற்றுக்கு முறையே துணைவேந்தர்களை நியமிக்க பரிந்துரை வழங்க தேடுதல் குழுக்களை நியமித்து மூன்று அறிவிக்கைகளை அரசிதழில் வெளியிட்டது.

பல்கலைக்கழக மானியக்குழுவின் விதிகளுக்கு உட்பட்டு இல்லை. எனினும், சென்னை உயர் நீதிமன்றம் ரிட் மனு எண் 28147/2022 மற்றும் 4174/2023 19.12.2023 அன்று வி.பழனியப்பா Vs வேந்தரின் செயலாளர், புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழகம் மற்றும் பிறர், என்ற வழக்கின் தீர்ப்பில் விதி 7.3 (ii) பல்கலைக்கழக மானியக்குழு (உயர்கல்வி ஒழுங்குமுறை 2018 தர பராமரிப்புக்காக பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில் ஆசிரியர்கள் மற்றும் பிற கல்விப் பணியாளர்களை நியமிக்க குறைந்தபட்ச தகுதி) அல்லாத வகையில் வேறெந்த தேடல் குழு மூலம் துணைவேந்தரை தேர்வு செய்வதை அனுமதிக்க முடியாது என்று கூறியுள்ளது.

மேற்குறிப்பிட்ட வழக்கில் உயர்நீதிமன்றம், ''அரசாணை எண் 3, தலைமை செயலகம் (உயர் மற்றும் தொழில்நுட்பக் கல்வி), நாள்: 20.01.2021 புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழக சட்டத்தின் 14(5) பிரிவின் கீழ் அமைக்கப்பட்ட “தேடுதல் குழு மூலம் புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் நியமனத்தை அனுமதிக்க முடியாது" என்று குறிப்பிட்டது.

அந்தத் தீர்ப்பின் மூலம், சென்னை உயர் நீதிமன்றம், புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தை நிர்வகிப்பது தொடர்புடைய சட்டபூர்வ விதிகளில் யுஜிசி விதிமுறைகள் 2018-க்கு இணங்க எவ்வித தாமதமும் இல்லாமல் திருத்தங்களை செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு புதுச்சேரி அரசு மற்றும் புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்துக்கு உத்தரவிட்டுள்ளது.

இந்தச் சட்டத்தின் தெளிவான விளக்கத்தைக் கருத்தில் கொண்டு, அரசியலமைப்பு சட்ட உரிமை மற்றும் சட்டபூர்வ தன்மைக்கு மதிப்பளித்து, தமிழக அரசு சிறப்பு அரசிதழ் எண். 337, நாள்: 13.09.2023, சிறப்பு அரசிதழ் எண்.452; நாள்: 20.09.2022, சிறப்பு அரசிதழ் எண்.19.10.2022 ஆகிய நாட்களில் வெளியிட்ட தனது அறிவிக்கையை திரும்பப் பெற்று, உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்கள் வழங்கிய தீர்ப்புகளுக்கு உட்பட்டும் யுஜிசி ஒழுங்குமுறைகளுக்கு உட்பட்டும் துணை வேந்தர் பதவி நியமனத்துக்காக வேந்தருக்கு பரிந்துரைக்கக் கூடிய மூன்று பேர் அடங்கிய குழுக்களை அமைக்கும் அறிவிக்கையை வெளியிடும் என்று தமிழக ஆளுநர் அவர்கள், சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்களின் வேந்தர் என்ற முறையில் நம்புகிறார்.

தமிழக ஆளுநர், தமிழகத்தின் பல்கலைக்கழகங்களின் வேந்தர் என்ற வகையில், உச்ச நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றங்களால் உறுதி செய்யப்பட்ட யுஜிசி உத்தரவுக்கு மதிப்பளித்து,தமிழகத்தில் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்களில் யுஜிசி விதிகளுக்கு ஏற்ப செயல்படும் விதிகளை தமிழக அரசு கொண்டு வரும் என்று மேலும் நம்புகிறார்.

மேற்குறிப்பிட்டுள்ள காரணங்களுக்காகவும், உயர்கல்வி நோக்கத்துக்காகவும் மாநிலத்தில் உள்ள லட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்காலம் மோசமாக பாதிக்கப்படக் கூடாது என்பதை உறுதிப்படுத்துவதற்காகவும் மேலே சுட்டிக்காட்டியபடி, தமிழக அரசு தேவையான நடவடிக்கை எடுக்கும் என தமிழக ஆளுநர் நம்புவதால், அறிவிக்கை எண். 01 நாள்: 06.09.2023, அறிவிக்கை எண் 02 நாள்: 06.09.2023, அறிவிக்கை எண் 03, நாள்: 06.09.2023 ஆகிய நாட்களில் வெளியிட்ட அறிவிக்கைகளை திரும்பப் பெறுகிறார்” என்று அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, தமிழகத்தில் உள்ள சென்னை பல்கலைக்கழகம், கல்வியியல் பல்கலைக்கழகம், கோவை பாரதியார் பல்கலைக்கழகம் ஆகிய 3 பல்கலைக்கழகங்களில் தற்போது துணைவேந்தர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த பல்கலைக்கழகங்களின் துணைவேந்தரை தேர்வு செய்வதற்கான தேடல் குழுவில், பல்கலைக்கழக செனட் உறுப்பினர்கள், தமிழக அரசின் பிரதிநிதி ஒருவர் மற்றும் ஆளுநர் தரப்பில் ஒருவர் இடம்பெறுவர். இக்குழு விண்ணப்பங்களை பரிசீலித்து, தகுதியான 3 பேரின் பெயர்களை ஆளுநருக்கு பரிந்துரைக்கும். அதில் ஒருவரை ஆளுநர் நியமிப்பது வழக்கம். இந்தச் சூழலில், துணைவேந்தர் தேடுதல் குழுவில் பல்கலைக்கழக மானிய குழு (யுஜிசி) பிரதிநிதி ஒருவரை நியமித்து ஆளுநர் உத்தரவிட்டிருந்தது நினைவுகூரத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE