கோவை கிளையில் 1,200-ல் இருந்து 710 ஆக குறைந்த பேருந்துகள் - தொழிலாளர்கள் பற்றாக்குறையால் தள்ளாட்டம்

By இல.ராஜகோபால்

கோவை: கரோனா தொற்று பரவலுக்கு முன் கோவை அரசு போக்குவரத்து கழகத்தில் 1,200 பேருந்துகள் இயக்கப்பட்டு வந்த நிலையில், தொழிலாளர்கள் பற்றாக்குறையால் தற்போது 710 பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுவதாக தெரியவந்துள்ளது. அரசு போக்குவரத்து கழகம் - கோவை சார்பில் நகர் மற்றும் புறநகர் பகுதிகள் உட்பட திருப்பூர், ஈரோடு, சேலம், உதகை, பொள்ளாச்சி, கரூர், திருச்சி உள்ளிட்ட பல்வேறு வழித்தடங்களில் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

கரோனா தொற்று பரவலுக்கு பின் பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்படும் பேருந்துகளின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. இதனால் தனியார் பேருந்து மற்றும் ஷேர் ஆட்டோக்களில் அதிக கட்டணம் கொடுத்து பயணிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக நுகர்வோர் அமைப்பினர் தெரிவித்துள்ளனர். தொழிலாளர்கள் பற்றாக்குறையே முக்கிய காரணம் என்றும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தொழிற்சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

கோயமுத்தூர் கன்ஸ்யூமர் வாய்ஸ் அமைப்பின் செயலாளர் லோகு கூறும்போது, “கரோனா தொற்று பரவலுக்கு பின் பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்பட்டுவந்த அரசு பேருந்து சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. இந்த சூழ்நிலையை சாதகமாக பயன்படுத்திக்கொண்டு தனியார் பேருந்துகள் மற்றும் ஷேர் ஆட்டோக்களின் உரிமையாளர்கள் அதிக கட்டணத்தை மக்களிடம் வசூலித்து வருகின்றனர். தமிழக அரசு இப்பிரச்சினைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களின் தொழிலாளர் சம்மேளனத்தின்(ஏஐடியுசி) மாநில துணை பொதுச் செயலாளர் செல்வராஜ் கூறியதாவது: தமிழகம் முழுவதும் 22 ஆயிரம் அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது 17 ஆயிரம் பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகின்றன. கோவை அரசு போக்குவரத்து கழகத்தில் 1,200 பேருந்துகள் இயக்கப்பட்டு வந்த நிலையில், தொழிலாளர்கள் பற்றாக்குறையால் தற்போது 710 பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகின்றன. கரோனா தொற்று பரவலுக்கு பின் தமிழ்நாட்டில் 5,500 பேருந்துகள் தொழிலாளர்கள் பற்றாக்குறையால் இயக்கப்படுவதில்லை.

அதேபோல் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கோவை அலுவலகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் நோய் தொற்று பரவலுக்கு முன் 2,000-க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது 600 பேருந்துகள் தொழிலாளர்கள் பற்றாக்குறையால் இயக்கப்படுவதில்லை.

2014-ம் ஆண்டுக்கு பின் புதிதாக தொழிலாளர்களை நியமனம் செய்யவில்லை. இதனால் கோவை உட்பட தமிழகம் முழுவதும் தொழிலாளர்கள் பற்றாக்குறை உள்ளது. ஒரு பேருந்தை இயக்க 1970-ம் ஆண்டுகளில் 7.5 ஊழியர்கள் (ஓட்டுநர், நடத்துநர் உள்ளிட்ட அனைத்து பிரிவுகளிலும் சேர்த்து) தேவை என கணக்கிடப்பட்ட நிலையில், தற்போது 6.5 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

மேலும் கணக்கிடப்பட்ட எண்ணிக்கையில் ஒவ்வொரு பேருந்தையும் இயக்க தேவையான பணியாளர்கள் இல்லை. இதனால் பல்வேறு வழித்தடங்களில் பேருந்துகளை இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இப்பிரச்சினைக்கு தீர்வு காண தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

தொடங்கப்படும் பேருந்துகள் 10 நாட்களில் நிறுத்தம்: கோயமுத்தூர் கன்ஸ்யூமர் வாய்ஸ் அமைப்பின் செயலாளர் லோகு கூறும்போது,“கோவை கோட்டத்தில் ஏற்கெனவே தொழிலாளர்கள் பற்றாக்குறை உள்ள நிலையில் அரசியல் அழுத்தம் காரணமாக பல்வேறு வழித்தடங்களில் புதிய பேருந்து சேவைகள் அவ்வப்போது தொடங்கப்படுகின்றன. ஆனால் இத்தகைய பேருந்து சேவை விழா நடத்தி தொடங்கப்பட்ட 10 நாட்களில் நிறுத்தப்படுகின்றன.

உதாரணத்துக்கு கோவை, காந்திபுரத்தில் இருந்து சரவணம்பட்டி, காளப்பட்டி, சிட்ரா வழியாக மீண்டும் காந்திபுரம் சென்றடையும் வகையில் 105 என்ற வழித்தட எண் கொண்ட பேருந்து மற்றும் ஆவாரம்பாளையம் பகுதியில் இருந்து கோவைப்புதூர் செல்லும் வழித்தடத்தில் தொடங்கப்பட்ட பேருந்து சேவைகள் தொடங்கப்பட்ட சில நாட்களில் ரத்து செய்யப்பட்டுள்ளன” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE