போக்குவரத்து ஸ்டிரைக் | நீலகிரியில் 60 சதவீத பேருந்துகளே இயக்கம்; படிப்படியாக சேவை குறைவதால் மக்கள் அவதி

By ஆர்.டி.சிவசங்கர்


உதகை: நீலகிரி மாவட்டத்தில் போக்குவரத்துத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் காரணமாக 60 சதவீத பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டன. பேருந்துகள் இயக்கம் குறைந்து வருவதால் மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.

அரசுப் பேருந்துப் போக்குவரத்து ஊழியர்கள் இன்று முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போக்குவரத்துத்தொழிலாளர்களின் ஊதிய ஒப்பந்தம் உட்பட பிரச்சினை குறித்து, 7 அம்ச கோரிக்கைகளை முன்னிறுத்தி பேச்சுவார்த்தை இதுவரை 5 கட்டமாக நடைபெற்றுள்ளது. போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் பேச்சுவார்த்தையில் பங்கேற்றும் சுமூகமான ஒப்பந்தம் எட்டப்படவில்லை. இதனால் போக்குவரத்துக்கழக தொழிற்சங்கங்கள் இன்று (ஜன.9) முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தில் இன்று காலை 10 மணிவரையில் 75 சதவீத பேருந்துகள் இயக்கப்பட்டன. ஆனால், அதன் பின்னர் பேருந்துகளின் எண்ணிக்கை கணிசமாக குறைந்தது. இரவு ஷிப்ட் முடிந்த நிலையில், ஓட்டுனர்கள் பேருந்துகளை பணிமனையில் நிறுத்தி விட்டு, வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக 11 மணியளவில் பேருந்துகள் இயக்கம் 60 சதவீதமாக குறைந்தது. பேருந்துகள் இயக்கப்படாததால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கடும் அவதியடைந்தனர். பலர் தனியார் ஆட்டோ, டாக்ஸி மற்றும் வாடகை வானங்களில் பயணிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர்.

நீலகிரி மாவட்டத்தில் தனியார் போக்குவரத்து இல்லாத நிலையில், மக்கள் அரசு போக்குவரத்துக்கழக பேருந்து சேவையையே நம்பியுள்ளனர். தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தால் மக்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாவார்கள்.

போக்குவரத்துக்கழக கிளை பொது மேலாளர் நடராஜன் கூறியதாவது: நீலகிரி மாவட்டத்தில் 91 சதவீத பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக சில தொழிற்சங்கங்கள் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம், தகை மண்டலம் சார்பாக பேருந்துகள் இயக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. எல்பிஎப் தொழிற்சங்கம் மற்றும் இதர தொழிற்சங்கத்தை சார்ந்த ஓட்டுநர், நடத்துநர் வைத்து முழுமையாக பேருந்து இயக்கப்படுகிறது. வேலை நிறுத்தம் தொடரும் பட்சத்தில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் இருந்து பயிற்சி பெற்ற வெளி ஓட்டுனர்களின் பட்டியல் பெறப்பெற்று அனைத்து பேருந்துகளும் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், தேவைப்படும் பட்சத்தில் ஓய்வு பெற்ற ராணுவ ஓட்டுனர்களை வைத்து இயக்கவும் மற்றும் காவல்துறை சார்பாக உரிய பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக கோவை கோட்டம் உதகை மண்டலம் சார்பாக பொது மக்களுக்கு இடையூரின்றி அனைத்து பேருந்துகளையும் முழுமையாக இயக்க அனைத்து விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE