கடலோர மாவட்டங்களில் கொட்டி தீர்த்த மழை

By செய்திப்பிரிவு

சென்னை: வட தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது. 5 இடங்களில் அதிகனமழை பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டலத் தலைவர் எஸ்.பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:

வட தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் தென்கிழக்கு அரபிக் கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக வட தமிழகத்திலும், அதையொட்டிய மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்துள்ளது.

ஜன. 8-ம் தேதி (நேற்று) காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி 5 இடங்களில் அதிகனமழையும், 15 இடங்களில் மிக கனமழையும், 55 இடங்களில் கனமழையும் பதிவாகியுள்ளது.

அதிகபட்சமாக மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் 24 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.புதுச்சேரியில் 12 செ.மீ. மழை பெய்துள்ளது. இது கடந்த 130 ஆண்டுகளில் ஜனவரி மாதத்தில் பதிவான அதிகபட்ச மழையாகும்.

வடகிழக்குப் பருவமழை இன்னும் நீடிக்கிறது. வட இந்தியப் பகுதிகளில் கடல் வெப்பமாக உள்ளது. கிழக்கு திசைக் காற்றும், மேற்கு திசைக் காற்றும் வலுவாக இருப்பதால் மேகக்கூட்டங்கள் உருவாகி, மழை பெய்து வருகிறது.

2018-ல் ஜன. 2-ம் தேதியும், 2020-ல் ஜன.19, 2021-ல் ஜன. 22, 2023-ல் ஜன. 12-ம் தேதி வடகிழக்கு பருவமழை விலகியது.

ஜன. 9, 10-ம் தேதிகளில் (இன்றும், நாளையும்) தென் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், வட தமிழகத்தில் சில இடங்களிலும், புதுச்சேரி, கரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

வரும் 11, 12, 13-ம் தேதிகளில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. வரும் 14-ம் தேதி தமிழகம், புதுச்சேரியில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

இன்று கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களிலும், நாளை கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும்.

தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதிகள், இலங்கை கடலோரப் பகுதிகள் மற்றும் அதையொட்டிய தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் இன்றும், நாளையும் மணிக்கு அதிகபட்சமாக 55 கி.மீ. வேகத்தில் சூறாவளிக் காற்று வீசக்கூடும். எனவே, இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.

இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE