பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.1000: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட அரிசி, சர்க்கரை, முழு கரும்புடன் ரூ.1,000 ரொக்கப் பரிசும் வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். பொங்கல் பரிசுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதுடன், பொங்கல் பரிசு விநியோகத்தை முன்னிட்டு உரிமைத்தொகை பெறும் 1.15 கோடி மகளிருக்கு இம்மாதம் 10-ம் தேதியே தொகை விடுவிக்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை பொதுமக்கள் சிறப்பாக கொண்டாடும் வகையில் பல ஆண்டுகளாக, நியாயவிலைக் கடைகள் மூலம் அரிசி, சர்க்கரை, கரும்பு ஆகியவற்றுடன் பணமும் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. கடந்த அதிமுக ஆட்சியில் 2021-ம் ஆண்டு ரூ.2,500 வழங்கப்பட்டது.

தொடர்ந்து, கடந்த 2022-ம் ஆண்டு திமுக ஆட்சியின் தொடக்கத்தில் ரொக்கப்பரிசு வழங்கப்படவில்லை. அதற்கு பதில், அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் மளிகைப்பொருள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டது. இதில், பொருட்களின் தரம்குறித்த சர்ச்சை எழுந்த நிலையில், கடந்த 2023-ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழகத்தில் உள்ள 2.19 கோடி அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் முகாம்களில் வாழும் இலங்கைத் தமிழர் குடும்பங்களுக்கு ரூ.1000 ரொக்கம், தலா ஒரு கிலோ பச்சரிசி மற்றும் சர்க்கரை, ஒரு முழு கரும்பு வழங்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து, இந்தாண்டும் அதேபோல் வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. இதற்கிடையில், கடந்த டிச.3, 4-ம் தேதிகளில் மிக்ஜாம் புயல், அதைத்தொடர்ந்து டிச.17, 18 தேதிகளில் ஏற்பட்ட பெருவெள்ளம் ஆகியவற்றை முன்னிட்டு, தமிழக அரசு அதிக பாதிப்புக்கு ரூ.6,000 மற்றும் சிறிய அளவில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ரூ.1,000 நிவாரணம் அறிவித்தது. அந்த தொகை தற்போது வழங்கப்பட்டு வருகிறது.

இந்த சூழலில், கடந்த ஜன.1-ம் தேதி, பொங்கல் தொகுப்பில் தலா ஒரு கிலோ அரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் முழு கரும்பு ஆகியவற்றை கொள்முதல் செய்து வழங்குவதற்கான அரசாணை வெளியிடப்பட்டது.

2.19 கோடி அரிசி அட்டைகள்: அதில், 2 கோடியே 19 லட்சத்து 57 ஆயிரத்து 402 அரிசி குடும்ப அட்டைதாரர்கள், முகாம் வாழ் இலங்கை தமிழர் குடும்பங்களுக்கு ரூ.35.20 விலையில் ஒரு கிலோ அரிசியும், ரூ.40.61 செலவில் ஒரு கிலோ சர்க்கரையும், ரூ.33 செலவில் ஒரு கரும்பும் கொள்முதல் செய்ய, ரூ.238 கோடியே 92 லட்சத்து 72 ஆயிரத்து 741 ஒதுக்கப்பட்டு, நிர்வாக ஒப்புதலும் வழங்கப்பட்டது. ஆனால், அந்த அரசாணையில் ரொக்கத் தொகை குறித்த எந்த அறிவிப்பும் இல்லை. இதையடுத்து, பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், பொங்கல்பண்டிகையை முன்னிட்டு பொதுமக்களுக்கு ரொக்கப்பணம் வழங்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில், தீவிர ஆலோசனைக்குப்பிறகு, அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு, ரூ.1000 ரொக்கம் வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துளளார்.

இதுகுறித்து நேற்று தமிழக அரசுவெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழர்களின் அடையாளமாக அனைத்துத் தரப்பு மக்களாலும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வரும் பெருமைமிகு பண்டிகை பொங்கல் விழாவாகும். இந்த நன்னாள் அனைத்துத் தொழில்களுக்கும், ஏன், மனிதகுலத்துக்கே அடித்தளமாய் விளங்கி,உணவளித்து வரும் விவசாயப் பெருங்குடி மக்களுக்கு நன்றி செலுத்தும் ஒரு நாளாகவும் தமிழர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த நன்னாளை முன்னிட்டு, 1 கிலோபச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்பு ஆகியவை பொங்கல் பரிசுத் தொகுப்பாக வழங்கப்படும் என்று கடந்த ஜன.2-ம் தேதி தமிழக அரசு அறிவித்திருந்தது.

இலவச வேட்டி, சேலை: மேலும், முன்கூட்டியே திட்டமிட்டு உற்பத்தி செய்த காரணத்தால், பொங்கல் திருநாளை முன்னிட்டு வழங்கப்படவுள்ள இலவச வேட்டி-சேலைகள் அனைத்தும் தயார் செய்யப்பட்டு, அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. பொங்கல் பரிசுத்தொகுப்புடன் சேர்த்து, இவற்றை வழங்குவதற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில், பொங்கல் திருநாளைச் சிறப்பாக மக்கள் கொண்டாட, மத்திய, மாநில அரசு ஊழியர்கள், வருமான வரி செலுத்துவோர், பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரிவோர், சர்க்கரை அட்டைதாரர்கள், பொருளில்லா அட்டைதாரர்கள் தவிர்த்து, ஏனைய குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் ரூ.1,000 பொங்கல் பரிசாக நியாயவிலைக் கடைகளில் பொங்கல் திருநாளுக்கு முன்னதாக ரொக்கமாக வழங்கப்படும் என்றுமுதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

மகளிர் உரிமைத் தொகை: மேலும், பொங்கலை முன்னிட்டு ஒவ்வொரு மாதமும் 15 -ம் தேதி வழங்கப்பட்டு வரும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை, இந்த மாதம் பொங்கலுக்கு முன்னதாக, அதாவது, வரும் ஜன.10 ம்தேதியே உரிமைத் தொகை பெற்றுவரும் 1.15 கோடி மகளிரின் வங்கிக் கணக்குகளுக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும் முதல்வர் அறிவித்துள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தொடரும் கட்டுப்பாடுகள்! தமிழக அரசு சார்பில் கடந்தாண்டு வரை 2.19 கோடி அரிசி குடும்ப அட்டைகளுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்ட நிலையில், தற்போது விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளால், பொங்கல் பரிசு பெறுவோர் எண்ணிக்கை கணிசமாக குறையும் என தெரிகிறது. மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்காக வருமான வரி செலுத்துவோர், அரசு ஊழியர்கள், கார் வைத்திருப்போர் என பல்வேறு வகைகளில் பயனாளிகள் வடிகட்டப்பட்டனர். இதையடுத்து, வெள்ள நிவாரணம் வழங்கப்படும் போதும் இதேபோன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இந்நிலையில், தற்போது பொங்கல் பரிசுத்தொகைக்கும், தரவு அடிப்படையிலான நிர்வாகம் என்ற அடிப்படையில் தமிழக அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE