“நான் ஒரு அப்பாவி...!” - ஜாமீன் மனுவில் செந்தில் பாலாஜி உருக்கம்

By செய்திப்பிரிவு

சென்னை: கடந்த 203 நாட்களாக சிறையில்உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி, ஜாமீன் கோரி மூன்றாவது முறையாக தாக்கல் செய்துள்ள மனுவுக்கு அமலாக்கத்துறை தரப்பில் பதிலளிக்க சென்னைமுதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சட்டவிரோதப் பணப்பரிமாற்ற தடைச்சட்டத்தின் கீழ் பதியப்பட்ட வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறையினர் கடந்த ஜூன் 14-ம் தேதி கைது செய்தனர். இந்த வழக்கில் செந்தில் பாலாஜிக்கு எதிராக சுமார் 3 ஆயிரம் பக்கங்கள் கொண்டகுற்றப்பத்திரிகை மற்றும் குற்றப்பத்திரிகை தொடர்பான ஆவணங்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர்.

இந்த வழக்கில் ஜாமீன் கோரிசெந்தில்பாலாஜி தரப்பில் ஏற்கெனவே 2 முறை தாக்கல் செய்திருந்த மனுக்களை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. அதையடுத்து செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் தள்ளுபடி செய்தது. அதேநேரம் செந்தில்பாலாஜியின் உடல் நிலையைக் கருத்தில் கொண்டு கீழமை நீதிமன்றத்தை மீண்டும் நாடலாம் என்றும், அந்த மனு மீது தகுதியின் அடிப்படையில் முடிவெடுக்கலாம் எனவும் உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது.

அதையடுத்து கடந்த 203 நாட்களாக சிறையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கோரி மூன்றாவது முறையாக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. அதில், இந்த வழக்கில் ஆவணங்கள் திருத்தப்பட்டுள்ளது என்றும், அதற்கான ஆதாரங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கடந்த200 நாட்களுக்கும் மேலாக அமைச்சர் செந்தில் பாலாஜி சிறையில் இருப்பதாலும், ஏற்கெனவே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுவிட்டதாலும் அவரது உடல் நிலையைக் கருத்தில் கொண்டு ஜாமீன் வழங்க வேண்டுமென கோரப்பட்டிருந்தது.

அவகாசம் தர கோரிக்கை: இந்த மனு முதன்மை அமர்வு நீதிபதி எஸ்.அல்லி முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோவும், அமலாக்கத்துறை தரப்பில் சிறப்பு அரசு வழக்கறிஞர் என். ரமேஷூம் ஆஜராகி வாதிட்டனர். அப்போது இதுதொடர்பாக பதிலளிக்க அவகாசம் அளிக்க வேண்டுமென அமலாக்கத்துறை தரப்பில் கோரப்பட்டது. அதையடுத்து இந்த மனுவுக்கு அமலாக்கத்துறை தரப்பில் வரும் ஜன.8-க்குள் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை அன்றைய தினத்துக்கு தள்ளிவைத்துள்ளார்.

நான் ஒரு அப்பாவி...! செந்தில் பாலாஜி உருக்கம்: அமைச்சர் செந்தில் பாலாஜி மூன்றாவது முறையாக தாக்கல் செய்துள்ள ஜாமீன் மனுவில் கூறியிருப்பதாவது: இந்த வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு 180 நாட்களுக்கும் மேலாக சிறைக்குள் உள்ளேன். இருதய நோய் உள்ளிட்ட பிரச்சினைகளால் அவதிப்பட்டு வருகிறேன்.

நீண்ட நேரம் நிற்கவோ அல்லது ஒரே இடத்தில் அமர்ந்திருக்கவோ கூடாது என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இந்த வழக்கில் சாட்சிகளின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அமலாக்கத் துறையும் வழக்கில் கைப்பற்றியுள்ள ஆவணங்களை தாக்கல் செய்துள்ளது. இந்த சூழலில் சாட்சிகளை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ கலைக்க எந்த வாய்ப்பும் கிடையாது. நானோ அல்லது எனது குடும்பத்தினரோ சாட்சிகளை மிரட்டியதாகவோ அல்லது அவர்களுக்கு நிர்பந்தம் கொடுத்ததாகவோ இதுவரையிலும் எந்த புகாரும் இல்லை. கூடுதல் விசாரணை தேவை என அமலாக்கத்துறையும் கோரவில்லை.

நான் ஒரு அப்பாவி. சட்டத்தை மதித்து நடப்பவன். ஜாமீன் வழங்கினால் நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைகளை ஏற்று நடப்பேன். சாட்சிகளை கலைக்க மாட்டேன். எனவே ஜாமீன் வழங்க வேண்டுமென உருக்கமாக கோரியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE