தமிழகத்தில் 6 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று முதல் 6 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரை கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: இன்று முதல் 5-ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 6, 7-ம் தேதிகளில் தமிழகத்தில் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலையில் லேசான பனிமூட்டம் நிலவும்.

நேற்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக திருநெல்வேலி மாவட்டம் ஊத்து, நாலுமுக்கு ஆகிய இடங்களில் 3 செ.மீ., காக்காச்சி, மாஞ்சோலையில் 2 செ.மீ., தென்காசி மாவட்டம் ராமநதி அணைபகுதியில் 1 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

குமரிக்கடல் மற்றும் அதை ஒட்டிய மன்னார் வளைகுடா பகுதிகளில் வரும் 5-ம் தேதி வரை மணிக்கு 40 முதல் 45 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 55 கி.மீ. வேகத்திலும் சூறாவளி காற்று வீசக்கூடும். எனவே, இந்த பகுதிகளுக்கு மீனவர்கள் செல்லவேண்டாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE