“சாகசங்களை நிகழ்த்துவார் பழனிசாமி” - செல்லூர் ராஜூ நம்பிக்கை

By என். சன்னாசி

மதுரை: “அதிமுகவுக்கு ஒரு பிரகாசமான எதிர்காலத்தை மீண்டும் உருவாக்கும் விதமாக விக்ரமாதித்தன் கதை போன்று சாகசங்களை கட்சியின் பொதுச் செயலர் தொடர்ந்து நிகழ்த்துவார்” என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ நம்பிக்கை தெரிவித்தார்.

ஆங்கில புத்தாண்டையொட்டி முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ மற்றும் புறநகர் அதிமுக மாவட்ட செயலர் விவி.ராஜன்செல்லப்பா எம்எல்ஏ ஆகியோர் தனது குடும்பத்தினருடன் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தனர். இவர்களுடன் மாநில தொழில்நுட்ப பிரிவு நிர்வாகி ராஜ்சத்யன் உள்ளிட்ட நிர்வாகிகளும் உடன் சென்றிருந்தனர்.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கூறியவது: “இந்தப் புத்தாண்டில் மதுரை மக்கள் மகிழ்ச்சியாக, சந்தோஷமாக இருக்கவேண்டும். 2023-ல் விரும்பத் தகாத நிகழ்வு, புதிய வைரஸ் தாக்குதல் போன்றவை 2024-ல் இல்லாமல் மகிழ்ச்சி நிறைந்த ஆண்டாக மலர வேண்டும் என்பதற்காக நானும், எனது குடும்பத்தினரும் மீனாட்சி சொக்கநாதரை தரிசனம் செய்தோம்.

மகிழ்ச்சியான ஆண்டாக புத்தாண்டு தொடங்கி இருக்கிறது. அதிமுகவுக்கு ஒரு பிரகாசமான எதிர் காலத்தை மீண்டும் உருவாக்கும் விதமாக விக்ரமாதித்தன் கதை போன்று சாகசங்களை கட்சியின் பொதுச்செயலர் தொடர்ந்து நிகழ்த்துவார். இவ்வாண்டில் பெரிய மகிழ்ச்சியை அதிமுகவிற்கு மக்கள் கொடுக்க உள்ளனர். கட்சியின் எதிர்காலமும் சிறப்பாக இருக்கும். மக்கள் அனைவரும் ஒரு முகமாக அதிமுக ஆட்சிதான் அமைய விரும்புகின்றனர்.

புயல், மழை, வறட்சி என எல்லாக் காலங்களிலும் அதிமுக நிர்வாகம் முடுக்கி விடப்பட்டு பணி செய்தோம். மக்களுக்கு ஏற்பட்டிருந்த இழப்புகளுக்கு ஈடு செய்யும் அளவுக்கு கொடுக்க முடியாவிட்டாலும், அதிமுக மற்றும் தொண்டு நிறுவனங்கள் சார்பில், மக்கள் மகிழ்ச்சியாக இருக்கும் வகையில் செய்துள்ளோம். அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE