பிரதமர் மோடி வருகை: இன்றும் நாளையும் திருச்சி - புதுகை சாலையில் போக்குவரத்து மாற்றம்

By செய்திப்பிரிவு

திருச்சி: திருச்சிக்கு நாளை ( ஜன.2 ) பிரதமர் வருகையையொட்டி, திருச்சி - புதுக்கோட்டை சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்து, மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப் குமார் உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி, இன்று ( ஜன.1 ) இரவு 8 மணி முதல் விமான நிலையம் வழியாக புதுக்கோட்டை செல்லும் அனைத்து கனரக வாகனங்களும் ஜி-கார்னர், டி.வி.எஸ்.டோல்கேட் மேம்பாலம், மன்னார்புரம் மேம்பாலம், எடமலைப்பட்டி புதூர் பைபாஸ் சந்திப்பு, விராலி மலை வழியாக புதுக்கோட்டை செல்ல வேண்டும்.

இதேபோல நாளை காலை 7 மணி முதல் சென்னை, சேலம், கோயம்புத்தூர் மற்றும் திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து புதுக்கோட்டை செல்லும் அனைத்துப் பேருந்துகளும் டி.வி.எஸ்.டோல்கேட், மன்னார்புரம், எடமலைப்பட்டி புதூர் பைபாஸ் சந்திப்பு, விராலி மலை வழியாக புதுக்கோட்டை செல்ல வேண்டும்.

திருச்சி விமான நிலையத்துக்கு செல்லும் கட்சியினரின் வாகனங்கள் பிரதமரை வரவேற்க விமான நிலையத்துக்கு வருகை தரும் கட்சித் தொண்டர்களின் வாகனங்கள் நாளை காலை 9 மணி வரை மட்டுமே புதுக்கோட்டை சாலையில் செல்ல அனுமதிக்கப்படும். குண்டூர், மாத்தூர், பாரதிதாசன் பல்கலைக் கழகம் செல்லும் கட்சியினரின் வாகனங்கள் டி.வி.எஸ்.டோல்கேட், மன்னார்புரம், எடமலைப்பட்டிபுதூர் பைபாஸ் சந்திப்பு, புதிய சுற்றுச்சாலை, கும்பக்குடி வழியாக செல்ல வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE