ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூட்டில் குற்றம்சாட்டப்பட்ட போலீஸ் அதிகாரிக்கு பதவி உயர்வா? - ரத்து செய்ய மார்க்சிஸ்ட் வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

சென்னை: ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூட்டில் குற்றம்சாட்டப்பட்டவருக்கு பதவி உயர்வு வழங்கியதை மறுபரிசீலனை செய்து ரத்து செய்ய வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக அக்கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் நேற்று விடுத்த அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூட்டை விசாரித்த ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் அறிக்கை கடந்த அக்டோபர் மாதம் வெளியானது. இந்த அறிக்கை பல்வேறு குற்றங்களை வெளிக் கொண்டு வந்தது. அன்றைய மாவட்ட ஆட்சியர் வெங்கடேஷ், தென் மண்டல ஐஜி சைலேஷ் குமார் யாதவ், மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த கபில் குமார் சரத்கர், துணை வட்டாட்சியராக இருந்த சேகர் உள்ளிட்ட காவல் துறை மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பரிந்துரைத்தது.

இந்நிலையில் அன்றைய தென் மண்டல ஐஜியாக இருந்த சைலேஷ் குமார் யாதவுக்கு இப்போது டிஜிபியாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. அவருக்கு பதவி உயர்வு வழங்கப்படுவது துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு இழைக்கப்படும் அநீதி. எனவே, ஸ்டெர்லைட் துப்பாக்கி சூட்டுக்கு காரணமானவர்கள் மீது உரிய சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தற்போது சைலேஷ் குமார் யாதவுக்கு வழங்கப் பட்டுள்ள டிஜிபி பதவி உயர்வை மறுபரிசீலனை செய்து ரத்து செய்ய வேண்டும்.

இவ்வழக்கில் குற்றவாளிகள் அனைவர் மீதும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள தயங்குவது உயர் அதிகாரத்தில் உள்ளவர்கள் எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்பதற்கு தூண்டுகோளாக அமைந்து விடும் என்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சுட்டிக்காட்ட விரும்புகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE