விஜயகாந்துக்கு பொது இடத்தில் சிலை, மணிமண்டபம் அமைக்க தமிழக அரசுக்கு பிரேமலதா கோரிக்கை

By செய்திப்பிரிவு

சென்னை: மறைந்த தேமுதிக நிறுவனத் தலைவரும், நடிகருமான விஜயகாந்துக்கு பொது இடத்தில் சிலை மற்றும் மணிமண்டபம் அமைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு தேமுதிக பொதுச் செயலாளரும், விஜயகாந்தின் மனைவியுமான பிரேமலதா கோரிக்கை விடுத்துள்ளார்.

கோயம்பேடு கட்சி அலுவலகத்தில் உள்ள விஜயகாந்த் நினைவிடத்தில் இன்று மரியாதை செலுத்திய பிரேமலதா, "விஜயகாந்தின் நினைவிடத்தில் தினம்தோறும் பூஜைகள், அலங்காரங்கள் செய்யப்படும். பொதுமக்கள் யார் வேண்டுமானாலும் வந்து அஞ்சலி செலுத்தலாம்.

இறுதி ஊர்வலத்தில் மிகப் பெரிய ஒத்துழைப்பு கொடுத்த தமிழக அரசுக்கும், முதல்வர் ஸ்டாலினுக்கும், ஆளுநர் ரவிக்கும், ஆளுநர் தமிழிசைக்கும், அனைத்துக் கட்சி தலைவர்களுக்கும், திரையுலகை சேர்ந்தவர்களுக்கும் நன்றி சொல்லிக் கொள்கிறேன். இதேபோல் நேரிலும், தொலைபேசி வழியாகவும் இரங்கல் தெரிவித்த அனைவருக்கும் தலைவணங்கி நன்றித் தெரிவித்து கொள்கிறேன்.

விஜயகாந்துக்கு பொது இடத்தில் சிலை மற்றும் மணிமண்டபம் அமைக்க வேண்டும் என தமிழக அரசிடம் கோரிக்கை வைத்துள்ளோம். தமிழக அரசு நிச்சயம் செய்துகொடுக்கும் என்று நம்புகிறோம்" என்று கூறினார். முன்னதாக, அனைவருக்கும் பிரேமலதா கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார்.

கோயம்பேடு தேமுதிக கட்சி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை இரவு விஜயகாந்தின் இறுதிச் சடங்கு முடிந்த பின்னர் பிரேமலதா கூறும்போது, “தீவுத்திடலில் இருந்து கோயம்பேடு தலைமை அலுவலகம் வரை 14 கிமீ தூரம் நடந்த இறுதி ஊர்வலத்தில், வழிநெடுக விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்திய அத்தனை தொண்டர்களுக்கும், நிர்வாகிகளுக்கும், பொதுமக்களுக்கும் என் நன்றி.

தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை எந்தவொரு தலைவருக்கும் கிடைக்காத ஒரு மிகப்பெரிய பெருமை விஜயகாந்துக்கு கிடைத்திருக்கிறது. புள்ளிவிவரங்களின் படி கடந்த 2 நாட்களில் விஜயகாந்தின் இறுதிச்சடங்கில் 15 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டுள்ளனர். இதற்கு விஜயகாந்த் செய்த தர்மமும், அவருடைய நல்ல எண்ணமும், குணமும்தான் காரணம்.

அரசு மரியாதையுடன் விஜயகாந்தின் உடல், சந்தனப் பேழையில் வைத்து நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. விஜயகாந்தின் கைவிரலில் இருக்கும் கட்சி மோதிரம் அகற்றப்படவில்லை. இன்று நாம், நம் தலைவரை இழந்திருக்கிறோம். இந்நாளில் நம் தலைவரின் கனவை அனைவரும் ஒன்று சேர்ந்து நிச்சயமாக வெற்றிபெறச் செய்து, அந்த வெற்றிக்கனியை அவரது பாதத்தில் சமர்ப்பிக்கும் நாள்தான் தேமுதிகவுக்கு உண்மையான வெற்றி நாள் என்பதை சூளுரைப் போம்.

கடற்கரையில் தலைவர்களுக்கு சமாதி அமைக்கப்பட்டுள்ளது போல தேமுதிக கட்சி அலுவலகத்தில் விஜயகாந்துக்கு சமாதி அமைக்கப்படும். ஒட்டுமொத்த தொண்டர்களும் வந்து வழிபடக்கூடிய கோயிலாக அது இருக்கும். வீழ்வது நாமாக இருந்தாலும், வாழ்வது தமிழாக இருக்க வேண்டும். நமது முரசு வெற்றி முரசாக தமிழகம் முழுவதும் ஒலிக்கச் செய்வோம்” என்று பேசியது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE