வானியல் ஆய்வுக்கான எக்ஸ்போசாட் செயற்கைக்கோள்: பிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் ஜன.1-ல் ஏவப்படுகிறது

By செய்திப்பிரிவு

சென்னை: வானியல் நிகழ்வுகளை இன்னும் ஆழமாகப் புரிந்து கொள்வதற்காக எக்ஸ்போசாட் எனும் அதிநவீன செயற்கைக்கோளை இஸ்ரோ வடிவமைத்துள்ளது.

இந்த செயற்கைக்கோள் பிஎஸ்எல்விசி-58 ராக்கெட் மூலம் ஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து புத்தாண்டுதினமான ஜனவரி 1-ம் தேதி காலை 9.10மணிக்கு விண்ணில் செலுத்தப்பட உள்ளது.தற்போது ராக்கெட், செயற்கைக்கோள் பாகங்கள் ஒருங்கிணைப்பு, சோதனை ஒட்டம் போன்ற செயல்பாடுகளை விஞ்ஞானிகள் மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து எரிபொருள் நிரப்புதல் உட்பட ஏவுதலின் இறுதிகட்ட பணிகளுக்கான கவுன்ட்டவுன் நாளை (டிசம்பர் 31) தொடங்கவுள்ளது.

விண்வெளி ஆய்வுக்காக அனுப்பப்படும் 2-வது செயற்கைக்கோளான எக்ஸ்போசாட் 469 கிலோ எடை கொண்டது. இதன் ஆயுட்காலம் 5 ஆண்டுகளாகும். இது பூமியில் இருந்து சுமார் 650 கி.மீ.உயரத்தில் நிலைநிறுத்தப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதற்காக போலிக்ஸ் (எக்ஸ்ரே போலரிமீட்டா்), எக்ஸ்பெக்ட் (எக்ஸ்ரே ஸ்பெக்ட்ரோகிராபி) ஆகிய 2 சாதனங்கள் பொருத்தப்பட்டுள்ளன.

இவை விண்வெளியில் பரவும் எக்ஸ் கதிர்களின் துருவ முனைப்பு அளவு மற்றும்கோணத்தை அளவிடுதல், நியூட்ரான் நட்சத்திரங்களில் இருந்து வெளிப்படும் கதிரியக்கம், கருந்துளை வாயுக்களின் நெபுலா உட்பட பல்வேறு அம்சங்களை ஆராயும். மேலும், ஒரேநேரத்தில் எக்ஸ் கதிர் மூலங்களின் நிறமாலை மற்றும் துருவப்படுத்தல் செயல்பாடுகளையும் ஆய்வு செய்ய முடியும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

பரிசோதனை முயற்சி: இதுதவிர பிஎஸ்எல்வி ராக்கெட்டின் இறுதி பகுதியான பிஎஸ்4 இயந்திரத்தில் போயம் எனும் பெயரிலான பரிசோதனை முயற்சி 3-வது முறையாக மேற்கொள்ளப்பட உள்ளது. அதன்படி பிஎஸ் 4 இயந்திரத்தில் இந்திய ஆராய்ச்சி நிறுவனங்களின் 10 ஆய்வுக் கருவிகள் இணைத்து அனுப்பப்பட உள்ளன. இவை செயற்கைக்கோள்கள் நிலைநிறுத்தப்பட்ட பின்னர் பிஎஸ் 4 இயந்திரம் உதவியுடன் புவியை வலம் வந்து அடுத்த சில மாதங்களுக்கு ஆய்வுகளை மேற்கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE