சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டத்தில் மெட்ரோ நிலையங்கள் அருகே பேருந்து நிறுத்தம்

By செய்திப்பிரிவு

சென்னை: இரண்டாம் கட்ட பணியின்போது மெட்ரோ ரயில் நிலையங்கள் அமையும் இடத்துக்கு அருகிலேயே பேருந்து நிலையங்களையும் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. முதல்கட்டமாக, கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி வரையிலான 4-வது வழித்தடத்தில் ஒருபகுதியான பூந்தமல்லி - போரூர் பாதையில் மெட்ரோ ரயில் நிலையங்கள் அருகிலேயே பேருந்து நிறுத்தங்களும் இடம்பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், பயணிகள் தாங்கள் பயணிக்கும் பேருந்துகளில் இருந்து மெட்ரோ ரயில்களுக்கு எளிதாக மாறுவதற்கு வசதியாக இருக்கும்.

சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம், 116.1 கி.மீ. தொலைவில் 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகிறது. அதாவது, மாதவரம் - சிறுசேரி சிப்காட் வரை (45.4 கி.மீ) 3-வது வழித்தடம், கலங்கரை விளக்கம் -பூந்தமல்லி வரை (26.1 கி.மீ.), மாதவரம்-சோழிங்கநல்லூர் வரை (44.6 கி.மீ.) 5-வது வழித்தடம் ஆகியவற்றில் மொத்தம் 119 மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்க திட்டமிட்டு, பணிகள் நடைபெற்று வருகின்றன. 40-க்கும்மேற்பட்ட இடங்களில் சுரங்கப்பாதை, உயர்மட்டப்பாதை, சுரங்க ரயில் நிலையங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இவற்றில், 4-வது வழித்தடத்தில் ஒரு பகுதியான போரூர் - பூந்தமல்லி பாதையை முதலில் முடித்து, 2025-ம் ஆண்டு இறுதியில் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், மெட்ரோ ரயில்இரண்டாம் கட்டத்தில் அமைக்கப்படும் மெட்ரோ ரயில் நிலையங்கள் அருகிலேயே பேருந்து நிறுத்தங்களும் இடம்பெற திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை மெட்ரோ ரயில்நிறுவனத்தின் மெட்ரோ நிலையங்கள் வடிவமைப்பை பொறுத்தவரை, மெட்ரோ ரயில் நிலையங்களில் இருந்து பேருந்து நிறுத்தம், ரயில் நிலையம் ஆகியவற்றை பயணிகள் எளிதாக அணுகும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக, போரூர் - பூந்தமல்லி பாதையில் அமைக்கப்படும் ரயில் நிலையங்களில் இருந்து 50 மீட்டர் முதல் 100 மீட்டரில் பேருந்து நிறுத்தங்கள் இடம்பெறநடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து ஆணையம் (கும்டா) தெரிவித்துள்ளது.

பேருந்து நிறுத்தத்துக்கு அருகேரயில் நிலையம் இருப்பது தொடர்பாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்துடன் கும்டா ஆலோசனை நடத்தி உள்ளது. இதன் மூலமாக,பயணிகள் தாங்கள் பயணிக்கும் பேருந்துகளில் இருந்து மெட்ரோரயில்களுக்கு எளிதாக மாறுவதற்கு வசதியாக இருக்கும். மற்றவழித்தடங்களிலும் இதேபோல்இடம்பெற நடவடிக்கை எடுக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE