சென்னை: விஜயகாந்த் கடந்த 14-ம் தேதி திருவேற்காட்டில் நடந்த தேமுதிக செயற் குழு, பொதுக்குழுவில் பங்கேற்றார். அப்போதே, அவர் சற்று உடல்நலம் குன்றிதான் காணப்பட்டார். ஆனாலும், மேடையில் அவரை பார்த்ததும், நிர்வாகிகள், தொண்டர்கள் உற்சாகமடைந்தனர்.
இந்நிலையில், இரண்டே வாரத்தில் அவர் காலமானது, பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கட்சி தொண்டர்கள், ரசிகர்கள், பொதுமக்கள் ஏராளமானோர் திரண்டு, விஜயகாந்த் உடலை பார்த்து கதறி அழுதபடி அஞ்சலி செலுத்தினர்.
தேமுதிக தலைமை அலுவலகம் நேற்று அதிகாலை வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘விஜயகாந்துக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது’ என தெரிவிக்கப்பட்டிருந்தது. அவர் மறைந்த பிறகு, மியாட் மருத்துவமனை நிர்வாக இயக்குநர் பிரித்வி மோகன்தாஸ் வெளியிட்ட செய்திக்குறிப்பில், “விஜயகாந்த் நுரையீரல் அழற்சியால் (நிமோனியா) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்றார். கடினமாக முயற்சித்தும் காலமானார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.