சென்னை: தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் வியாழக்கிழமை காலமானார். அவரது மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள், ரசிகர்கள், தொண்டர்கள் மற்றும் மக்கள் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். இத்தகைய சூழலில் விருத்தாசலம் பெண் ஒருவரின் ஃபேஸ்புக் பதிவு கவனம் ஈர்த்துள்ளது. அந்த பதிவு குறித்து பார்ப்போம்.
“எங்க ஊர் விருத்தாசலம்ல தான் முதன்முறையா எம்.எல்.ஏ ஆனார். அப்போ கம்ப்யூட்டர் கிளாஸ் பத்தி எல்லாம் யோசிச்சுக்கூட பார்க்க முடியாத எங்கள போல எத்தனையோ மிடில் கிளாஸ் பெண்களுக்கு இது எவ்வளவு பெரிய வாய்ப்பு. இது மட்டும் இல்லாம இலவச தையல் பயிற்சி வகுப்பும் இருந்துச்சு. சினிமால கேப்டனா அவர ரொம்ப பிடிச்சாலும் எங்க ஊர் எம்.எல்.ஏ-வா அவர பாத்து பேசினது இன்னும் அவர் மேல் பாசமும் பிரமிப்பும் அதிகமாச்சு. தங்கமான மனுஷன். மிஸ் யூ சார்” என அந்த பதிவில் அப்பெண்மணி குறிப்பிட்டுள்ளார்.
விஜயகாந்த், தேர்தல் களத்தில் முதல் முதலில் போட்டியிட்டது 2006 சட்டப்பேரவை தேர்தலில் தான். தமிழகம் முழுவதும் அனைத்து தொகுதியிலும் தேமுதிக போட்டியிட்டது. விஜயகாந்த், விருத்தாசலம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவர் அந்த தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தபோது பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி இருந்தார். அப்படி அவர் இலவச கணினி பயிற்சி வழங்கியுள்ளார். அதில் பலன் அடைந்த பெண் ஒருவர் தான் தற்போது இந்த பதிவை பதிவிட்டுள்ளார்.