“பசிப்பிணி தீர்த்த பொன்மன வள்ளல் விஜயகாந்த்” - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் புகழஞ்சலி

By செய்திப்பிரிவு

சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவுக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தனது எக்ஸ் தள பதிவில் அவர் கூறியிருப்பதாவது: “மதிப்பிற்குரிய கேப்டன் விஜயகாந்த் மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். தேமுதிக நிறுவனர் விஜயகாந்த்தை ‘பசிப்பிணி தீர்த்த பொன்மன வள்ளல்’ என்று அஞ்சலி செலுத்துவோம். அவரை இழந்துவாடும், அவரது ரசிகர்களுக்கும், தேமுதிக தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்” இவ்வாறு நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் சிகிச்சை பலனின்றி இன்று (டிச.28) காலை காலமானார். அவருக்கு வயது (71). அவரது மறைவால் தேமுதிக கட்சித் தொண்டர்கள், திரை ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். விஜயகாந்த் இல்லத்தில் உள்ள தேமுதிக கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டுள்ளது.

அவரது மறைவு தொடர்பாக மியாட் மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், “நிமோனியா (நுரையீரல் அழற்சி) காரணமாக அனுமதிக்கப்பட்டு வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்றுவந்த விஜயகாந்துக்கு மருத்துவப் பணியாளர்களின் கடின முயற்சி இருந்தபோதிலும் காலமானார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE