எண்ணூர் அமோனியா வாயுக் கசிவு முற்றிலும் நிறுத்தம்; ஆலையை மூட வலியுறுத்தி மக்கள் போராட்டம்

By செய்திப்பிரிவு

சென்னை: ‘சென்னை - எண்ணூர் பகுதியில் தொழிற்சாலையில் இருந்து வெளியேறிய அமோனியா வாயுக் கசிவு முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. எனவே, பொது மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை’ என கூறியுள்ள தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், சென்னை ஐஐடி நிபுணர்கள் உள்ளிட்ட தொழில்நுட்பக் குழு ஒன்று அமைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘சென்னை, எண்ணூர் பகுதியில், நேற்று (டிச.26) நள்ளிரவு 11-45 மணியளவில், கோரமண்டல் இண்டர்நேஷனல் லிமிடெட் என்னும் நிறுவனத்தின் அமோனியா குழாய்களில் ஏற்பட்ட வாயுக் கசிவினால் அருகில் உள்ள பொதுமக்களுக்கு கண் எரிச்சல், மூச்சு விடுவதில் சிரமம் போன்ற பிரச்சினைகள் ஏற்பட்டன.

திரவ அமோனியா சேகரிப்பு: சென்னை எண்ணூரில் இயங்கி வரும் கோரமண்டல் இண்டர்நேஷனல் லிமிடெட் தொழிற்சாலையில், விவசாயத்துக்குத் தேவையான உரங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இதற்கு அமோனியா திரவம் மூலப்பொருளாகத் தொழிற்சாலையின் வளாகத்தில் சேமிப்புத் தொட்டியில் சேகரிக்கப்பட்டு வருகிறது. தேவைப்படும் அமோனியா திரவம் அவ்வப்போது வெளிநாடுகளில் இருந்து கப்பல் மூலம் இறக்குமதி செய்யப்பட்டு, எண்ணூரில் அமைந்துள்ள சிறுதுறைமுகத்திலிருந்து உரிய குழாய்கள் மூலமாக இந்தத் தொழிற்சாலையில் உள்ள சேமிப்புத் தொட்டியில் சேகரிக்கப்பட்டு, உற்பத்திக்குப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

நள்ளிரவில் வாயு கசிவு: இந்த நிலையில், நேற்று (டிச.26) நள்ளிரவு 11-45 மணியளவில் இந்தத் தொழிற்சாலையில் உள்ள குழாய்களில் ஏற்பட்ட அமோனியா வாயுக் கசிவினால், தொழிற்சாலையின் அருகே உள்ள குடியிருப்புப் பகுதிகளில் வசித்துவந்த பொதுமக்களுக்கு கண் எரிச்சல், மூச்சு விடுவதில் சிரமம் போன்ற உபாதைகள் ஏற்பட்டன. வாயுக் கசிவினைக் கண்டறிந்தவுடன், தகுந்த நிபுணர்கள் உடனே வரவழைக்கப்பட்டு, 20 நிமிடங்களில் அந்தத் தொழிற்சாலையில் ஏற்பட்ட வாயுக் கசிவு முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. மேலும், காவல்துறையும், மாவட்ட நிர்வாகமும் ஒருங்கிணைந்து போதுமான ஆம்புலன்ஸ்களை உடனடியாக ஏற்பாடு செய்து, நிலைமை சரிசெய்யப்பட்டது.

மருத்துவக் கண்காணிப்பில் 42 பேர்: இந்த வாயுக் கசிவினால், பெரியகுப்பம், சின்னக்குப்பம் மற்றும் அருகிலுள்ள பகுதிகளைச் சேர்ந்த சுமார் 60 பேருக்கு கண் எரிச்சல் மற்றும் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதையடுத்து, ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மற்றும் அதன் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் அவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது 42 பேர் மருத்துவமனைகளில் தொடர்ந்து கண்காணிப்பில் உள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட பகுதிகளில் மக்களுக்கு மருத்துவ பராமரிப்பு மற்றும் சுகாதார ஆலோசனைகளை வழங்குவதற்காக இரண்டு நுரையீரல் நிபுணர்களைக் கொண்டு 5 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டன. மேலும், தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மருத்துவமனைக்குச் சென்று பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து, அவர்களது உடல் நலன் குறித்து விசாரித்து, உரிய மருத்துவ சிகிச்சைகளை வழங்கிட உத்தரவிட்டார்.

தொழில்நுட்பக் குழு: தற்போது குழாயில் அமோனியா கசிவு இல்லை என தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தால் உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய உறுப்பினர் செயலாளர், சென்னை இந்திய தொழில்நுட்பக் கழகத்தைச் சேர்ந்த நிபுணர்கள், மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் மண்டல அலுவலகத்தைச் சேர்ந்த அலுவலர், தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனம் (NEERI), மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் (CLRI) மற்றும் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககத்தின் அலுவலர்களை உறுப்பினர்களாகக் கொண்ட தொழில்நுட்பக் குழு ஒன்று உடனடியாக அமைக்கப்பட்டுள்ளது.

இக்குழு தனது உடனடி மதிப்பீட்டு அறிக்கையை 24 மணி நேரத்துக்குள் அரசுக்கு சமர்ப்பிக்குமாறும், தனது விரிவான அறிக்கையை மூன்று நாட்களுக்குள் சமர்ப்பிக்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழக அரசு உத்தரவு: மேலும், கப்பலில் இருந்து கொண்டு வரப்படும் அமோனியாவை வெளியே எடுப்பதற்குப் பயன்படுத்தப்படும் குழாய்களை முற்றிலுமாக சரிசெய்து, உரிய பரிசோதனைகள் மேற்கொண்ட பிறகே, அமோனியா கப்பலில் இருந்து இறக்கப்பட வேண்டும் என தொழிற்சாலை நிர்வாகத்துக்கு தமிழக அரசால் உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே, வாயுக்கசிவு முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், இதுகுறித்து பொதுமக்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை’ என்று அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்கள் போராட்டம்: இதனிடையே, எண்ணூர் பகுதியில் அமோனியா வாயு கசிவுக்கு காரணமாக இருந்துவரும் உரத் தொழிற்சாலையை மூட வலியுறுத்தி அப்பகுதி மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அசாம்பவித சம்பவங்களைத் தடுக்க அங்கு போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அதேவேளையில், “வாயுக் கசிவால் பாதிக்கப்பட்ட 36 பேர் ஆகாஷ் மருத்துவமனையிலும், அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் 6 பேர், என மொத்தம் 42 பேருமே நலமுடன் இருக்கிறார்கள். இன்னும் சில மணி நேரத்தில் வீடுகளுக்கு திரும்புவார்கள். தீவிர சிகிச்சைப் பிரிவில் யாரும் இல்லை, தீவிர பாதிப்புகள் எதுவும் இல்லை” என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். அதன் முழு விவரம்: மருத்துவமனையில் 42 பேரும் நலமுடன் இருப்பதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

45 mins ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

மேலும்