காஞ்சிபுரம் அருகே என்கவுன்டர்: இரண்டு ரவுடிகள் சுட்டுக் கொலை

By செய்திப்பிரிவு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே பிரபல ரவுடி வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய 2 பேர் மீது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் ஒருவர் சம்பவ இடத்திலும் மற்றொருவர் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியிலும் உயிரிழந்தனர்.

காஞ்சிபுரம் அருகே உள்ள பல்லவர்மேடு என்ற பகுதியை சேர்ந்தவர் பிரபல ரவுடி பிரபாகரன். இவர் மீது கொலை வழக்கு, கொலை முயற்சி உள்ளிட்ட ஏராளமான வழக்குகள் உள்ளன. தேமுதிக நிர்வாகி சரவணன் கொலை வழக்கில் கைதாகி தற்போது ஜாமீனில் வெளிவந்த அவரை நேற்று (டிச.27) மர்ம நபர்கள் சிலர் பட்டப்பகலில் ஓடஓட வெட்டி படுகொலை செய்தனர். இந்த கொலை தொடர்பாக மாவட்ட கண்காணிப்பாளர் தலைமையில் ஐந்து தனிப்படைகள் அமைத்து போலீசார் குற்றவாளிகளை தேடி வந்தனர்.

இந்த நிலையில், காஞ்சிபுரம் புதிய ரயில் நிலையம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார் அங்கு வந்த ஒரு காரை நிறுத்த முயன்றுள்ளனர். அப்போது காரிலிருந்த நபர்கள் போலீசாரை நோக்கி கையெறி குண்டுகளை வீசி அங்கிருந்து தப்பிக்க முயன்றதாக தகவல். இதனையடுத்து தங்களை பாதுகாத்துக் கொள்ளும் நோக்கில் போலீசார் வாகனத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இந்த துப்பாக்கிச் சூட்டுல் காருக்குள் இருந்த இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

போலீசாரின் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டவர் பிரபாகரனால் கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் தேமுதிக நிர்வாகி சரவணனின் அண்ணன் ரகு என்பது விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இவர் மீது கொலை வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. காரில் இருந்த ரகுவின் கூட்டாளி பாஷாவும் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நிலையில் அவரை சிகிச்சைக்காக மருத்துவமனை அழைத்துச் செல்லும் வழியிலேயே உயிரிழந்ததாக கூறப்படுகிறது. ரவுடிகள் இருவரும் தாக்கியதில் படுகாயமடைந்த போலீசார் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE