சிபிசிஎல் நிறுவனத்திடம் இருந்து நிவாரணம் பெற்று மக்களுக்கு அரசு வழங்க வேண்டும்: அதிமுக வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

சென்னை: கொசஸ்தலையாற்றில் எண்ணெய் கழிவு கலந்ததற்கு காரணமாக இருந்த சிபிசிஎல் நிறுவனத்திடம் இருந்து நிவாரணம் பெற்று மீனவர்களுக்கு அரசு வழங்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: மழைநீர் வடிகால் விவகாரத்தில் முதல்வரும், உள்ளாட்சித்துறை அமைச்சரும் வெவ்வேறு விதமாக பேசுகின்றனர். இதற்கு தான் வெள்ளை அறிக்கை கேட்கிறோம். அதை கொடுக்க ஏன் பயப்பட வேண்டும். தென்தமிழகத்தைப் பொருத்தவரை வாய்க்கால்களை தூர்வாரியிருந்தால் மழைநீர் தேங்கியிருக்காது.

இதற்கெல்லாம் திமுக அரசு பொறுப்பேற்க வேண்டும். நாங்கள் கூறியதை தான்மத்திய நிதியமைச்சரும் தெரிவித்திருக்கிறார். மேலும், அரசியலில் நாகரீகம் இருக்க வேண்டும். அரசியலுக்கு நேற்று வந்தவர் உதயநிதி. அவர் வாய்க்கு வந்தபடி பேசக்கூடாது. பொறுப்பாக கருத்துகளைச் சொல்ல வேண்டும். அந்தபக்குவம் இல்லாத அரசியல்வாதி உதயநிதி. 2007-13 காலகட்டத்தில் தமிழகத்துக்கான ரூ.13 ஆயிரம் கோடியை ஏன் பெற்றுத் தரவில்லை என தனது தந்தையிடம் அவர் கேட்க வேண்டும். எண்ணூரில் எண்ணெய் கழிவுகலந்ததால் ஏற்பட்ட தாக்கம் பழவேற்காட்டில் இருந்து மரக்காணம் வரை இருக்கிறது. அதே நேரம், முற்றிலும் பாதிக்கப்பட்ட படகுகளுக்கு ரூ.2 லட்சமும், பகுதி பாதிப்படைந்தவற்றுக்கு ரூ.1 லட்சமும் வழங்க வேண்டும். வலைகளுக்கு ரூ.5 லட்சம் கொடுக்க வேண்டும். அரசு தற்போது அறிவித்த நிவாரணம் போதாது.

அதே நேரம், நிவாரணம் தொடர்பாக சிபிசிஎல் நிறுவனத்தை ஏன்அரசு நிர்ப்பந்திக்கவில்லை.கோடிக்கணக்கில் லாபம் ஈட்டும்நிறுவனம் ரூ.300 கோடி கொடுக்கட்டுமே. கப்பலில் இருந்து எண்ணெய் கசிந்தபோது அதிமுகஅரசு சார்பில் அந்த நிறுவனத்திடம் இருந்து நிவாரணம் பெற்றுமீனவர்களிடம் கொடுத்தோம். பள்ளிக்கல்வித்துறை விழிப்புடன்இருந்து தீண்டாமையை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும்.அரசுத்துறையில் அதிகமாக காலிப்பணியிடம் இருக்கும்போது குறைந்தளவிலான பணியிடங்களைநிரப்புவதற்கான அறிவிப்புமட்டுமே வெளியாகியிருக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE