ஆடு, மாடு, கோழி, மீன் வளர்ப்பு; விவசாயிகளுக்கு ரூ.1,500 கோடிக்கு வட்டியில்லா கடன் வழங்க முடிவு: அமைச்சர் பெரியகருப்பன் தகவல்

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்தில் ஆடு, மாடு, கோழி, மீன் ஆகியவற்றை வளர்க்கும் விவசாயிகளுக்கு வட்டியில்லா கூட்டுறவுக் கடன் ரூ.1,500 கோடி வழங்கப்படவுள்ளது என்று கூட்டுறவுத் துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தமிழக அரசின் கூட்டுறவுத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் உள்ள கூட்டுறவுச் சங்கங்கள் மற்றும் கூட்டுறவு வங்கிகள் பொதுமக்களுக்கு பல்வேறு வகையான கடன்களை வழங்கி வருகின்றன. வேளாண் கடன் அட்டை திட்டத்தின் கீழ் கால்நடை வளர்ப்பு (ஆடு, மாடு கோழி) மீன் வளர்ப்பு மற்றும் அவை சார்ந்த தொழில்களில் ஈடுபடும் விவசாயிகளுக்கு வட்டியில்லா கூட்டுறவு கடனாக ரூ.1,500 கோடி அளவில் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார். அதன்படி, 2023-24 வேளாண் மற்றும் உழவர் நலத்துறை மானியக் கோரிக்கையின்போது வேளாண் மற்றும் உழவர்நலத் துறை அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன் அறிவிப்பு வெளியிட்டார்.

அந்த அறிவிப்பினை செயல்படுத்தும் வகையில் கடந்த 18-ம் தேதி அரசாணை வெளியிடப்பட்டது. அதன்படி 2023-24-ம் நிதியாண்டுக்கு கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் கால்நடை வளர்ப்பு, மீன் வளர்ப்பு மற்றும் அவை சார்ந்த தொழில்களுக்கு வழங்கப்படும் வட்டியில்லா நடைமுறை மூலதனக் கடன்களுக்கு ஆண்டு குறியீடாக ரூ.1,500 கோடி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே, இவை சார்ந்த தொழில்களில் ஈடுபடும் விவசாயிகள், தொடர்புடைய கூட்டுறவுச் சங்கங்கள் மற்றும் கூட்டுறவு வங்கிகளை அணுகி இத்திட்டத்தின் மூலம் பயனடையலாம் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE