பொதிகை தொலைக்காட்சியின் பெயரை டிடி தமிழ் மாற்றுவதா? - இந்திய கம்யூ. கண்டனம்

By செய்திப்பிரிவு

சென்னை: பொதிகை தொலைக்காட்சியின் பெயரை மாற்றும் மத்திய அரசின் நடவடிக்கைக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் நேற்று விடுத்த அறிக்கையில் கூறியிருப்பதாவது: மத்திய அரசால் கடந்த 1975-ல் தொடங்கப்பட்ட சென்னை தொலைக் காட்சி நிலையம், தமிழ் மக்களிடையே கருத்துக் கணிப்பு நடத்தி 2000-ம் ஆண்டு ‘பொதிகை’ தொலைக்காட்சி என பெயர் மாற்றப்பட்டது. அதே நேரத்தில், பல்வேறு மொழிகளில் இருந்த தொலைக் காட்சி ஒளிபரப்பு நிலையங்களின் பெயர்களும் மாற்றப் பட்டன.

மத்திய இணையமைச்சர் அறிவிப்பு: இந்த ‘பொதிகை’ என்ற பெயர் பொங்கல் முதல் மாற்றப்பட்டு ‘டிடி தமிழ்’ என அழைக்கப்படும் என்று மத்திய இணையமைச்சர் எல்.முருகன் அண்மையில் அறிவித்துள்ளார். கடந்த 23 ஆண்டுகளாக அழைக்கப்பட்டுவந்த ‘பொதிகை’ என்பதை ‘டிடி தமிழ்’ என மாற்றவேண்டிய அவசியம் என்ன? அதுவும் பொங்கல் அன்று பொதிகை-யின் பெயரை வெறுமனே டிடி தமிழ் என்று அறிவிப்பது எதற்காக?

அந்தந்த மாநிலங்களில் உள்ள புகழ் பெற்ற மலைகளின் பெயர்களை, அந்தந்த மொழி பேசும் மக்கள் பரிந்துரைத்ததன் அடிப்படையில், தமிழில் பொதிகை, கன்னடத்தில் சந்தனா, தெலுங்கில் சப்தகிரி, மகாராஷ்டிராவில் சஹ யாத்ரி, குஜராத்தில் கிரினார் என்று தொலைக் காட்சிகளுக்கு பெயர்கள் வைக்கப்பட்டன.

‘பொதிகை’ பெயர் நீக்கம், இந்தப் பெயர்களையும் மாற்றுவ தற்கான தொடக்கமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. எனவே அந்தந்த மாநில மக்களின் தனித்துவத்தை, உணர்வுகளை அவமதிக்கும் மத்திய அரசின் போக்கு கைவிடப்பட வேண்டும்.

அடையாளத்தை அழிக்க முயற்சி: ஏற்கெனவே, பொதிகை தொலைக் காட்சியில், தமிழகத்தின் சமூக பொருளாதார வாழ்வுக்கு போதிய இடம் வழங்காமல், தமிழ் சார்ந்த தனித்துவமான நிகழ்ச்சி களை ஒளிபரப்பாமல், இந்தியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளை தமிழில் மொழி மாற்றம் செய்து உள்ளீடற்ற ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், பொதிகை என அழைக்கப்பட்டு வந்த தமிழ் அடையாளத்தையும் மத்திய அரசுஅழிக்க முயற்சிக்கிறது. இந்த பெயர் மாற்ற முயற்சியை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. இதனை கைவிட்டு தொடர்ந்து பொதிகை என்ற பெயரிலேயே அழைக்கப் படுவதை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப் பட்டுள்ளது. அந்தந்த மாநில மக்களின் தனித்துவம், உணர்வுகளை அவமதிக்கும் மத்திய அரசின் போக்கு கைவிடப்பட வேண்டும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE