ஏரல் வட்டாட்சியர் திடீர் மாற்றம் - காரணம் என்ன?

By செய்திப்பிரிவு

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் ஏரல் வட்டாட்சியராக பணியாற்றி வந்தவர் கைலாச குமாரசாமி. தாமிரபரணி கரையோரத்தில் இருக்கும் ஏரலில் மழை வெள்ள பாதிப்புகள் அதிகம் ஏற்பட்டன. இந்நிலையில் உடல்நிலை பாதிப்பு காரணமாக ஏரல் வட்டாட்சியரால் மழை வெள்ள நிவாரண பணிகளை முறையாக கவனிக்க முடியவில்லை எனக் கூறப்படுகிறது. இதையடுத்து அவரது வேண்டுகோளுக்கு இணங்க அவரை மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி நேற்று பணியிட மாறுதல் செய்து உத்தரவிட்டார் . அவருக்கு பதிலாக திருச்செந்தூர் ஆதிதிராவிடர் நலத்துறை தனி வட்டாட்சியர் கோபாலகிருஷ்ணன் ஏரல் புதிய வட்டாட்சியராக நியமிக்கபட்டுள்ளார். கைலாச குமாரசாமிக்கு புதிய பணியிடம் வழங்கப்படவில்லை.

தூத்துக்குடியில் 3 இடங்களில் மறியல்: தூத்துக்குடியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் நேற்று 3 இடங்களில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தூத்துக்குடி அன்னை தெரசா காலனி பொதுமக்கள், தங்கள் பகுதியில் தேங்கி உள்ள மழைநீரை அகற்றக் கோரி தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகம் அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதிகாரிகள், போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மழைநீரை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. அதன்பின் மக்கள் கலைந்து சென்றனர். இதே போன்று சிவந்தாகுளம் பகுதி மக்கள் மழைநீரை அகற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வலியுறுத்தி திருச்செந்தூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. எட்டயபுரம் சாலை மாப்பிள்ளையூரணி விலக்கு பகுதியில் பாரதிநகர் மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கும் பரபரப்பு ஏற்பட்டது.

நிவாரண பணிக்கு பகுதி வாரியாக வட்டாட்சியர்கள் நியமனம்: தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர் மற்றும் ஏரல்வட்டங்களில் அதிக வௌ்ளச்சேதம் ஏற்பட்டு, மக்களின் இயல்பான வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இப்பகுதிகளில் மக்களுக்கு நிவாரண பொருட்கள்கிடைப்பதை உறுதிப்படுத்த வட்டாட்சியர்களுக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

அதன் விவரம்: முரளிதரன்- தனி வட்டாட்சியர் (நிலம் எடுப்பு, தூத்துக்குடி) - தூத்துக்குடி மாநகராட்சி கிழக்கு மண்டலம், ஞானராஜ்- தனி வட்டாட்சியர் (நில எடுப்பு தேசிய நெடுஞ்சாலை) - தூத்துக்குடி மாநகராட்சி கிழக்கு மண்டலம், சங்கரநாராயணன்- தனி வட்டாட்சியர் (நிலஎடுப்பு சிப்காட்) தூத்துக்குடி மாநகராட்சி மேற்கு மண்டலம், ராஜசெல்வி- தனி வட்டாட்சியர் (நிலஎடுப்பு சிப்காட்) - தூத்துக்குடி மாநகராட்சி தெற்கு மண்டலம், அமுதா- தனி வட்டாட்சியர் (நிலஎடுப்பு சிப்காட்) - தூத்துக்குடி மாநகராட்சி வடக்குமண்டலம், கண்ணன்- தனி வட்டாட்சியர் (நிலஎடுப்பு இஸ்ரோ) - ஆறுமுகமங்கலம் குறுவட்டம். மலர்தேவன்- தனி வட்டாட்சியர் (நிலஎடுப்பு இஸ்ரோ) - ஆறுமுகமங்கலம் குறுவட்டம், ராஜீவ்தாகூர் ஜேக்கப்- தனி வட்டாட்சியர் (நிலஎடுப்பு இஸ்ரோ) - ஆழ்வார்திருநகரி குறுவட்டம்.

முத்து- தனி வட்டாட்சியர் (நிலஎடுப்பு சிப்காட்) - பெருங்குளம் குறுவட்டம், தங்கையா- தனி வட்டாட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம், கயத்தாறு) - பெருங்குளம் குறுவட்டம். பாலசுந்தரம்- தனிவட்டாட்சியர் (நிலஎடுப்பு இஸ்ரோ) - திருச்செந்தூர் குறுவட்டம், கோபால்- தனி வட்டாட்சியர் (நிலஎடுப்பு சிப்காட்) - ஆத்தூர் குறுவட்டம், முருகேசன்- தனி வட்டாட்சியர் (நிலஎடுப்பு சிப்காட்) - உடன்குடி குறுவட்டம், சுவாமிநாதன்- கலால் மேற்பார்வை அலுவலர் - ஆத்தூர் குறுவட்டம், ராதாகிருஷ்ணன்- தனி வட்டாட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம், ஸ்ரீவைகுண்டம்) - ஸ்ரீவைகுண்டம் குறுவட்டம், நம்பிராயர்- தனி வட்டாட்சியர் (நில எடுப்பு சிப்காட்)- செய்துங்கநல்லூர் குறுவட்டம். பரமசிவன், தனி வட்டாட்சியர் (நிலஎடுப்பு சென்னை - கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலை)- ஸ்ரீவைகுண்டம் பேரூராட்சி பகுதிகள், கோபாலகிருஷ்ணன்- தனி வட்டாட்சியர் (ஆதிதிராவிடர் நலத்துறை, திருச்செந்தூர் - ஸ்ரீவைகுண்டம் குறுவட்டம், செல்வபிரசாத்- தனி வட்டாட்சியர் (கேபிள் டி.வி.) - வல்லநாடு குறுவட்டம். இவர்கள் அனைவரும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரண பணிகளை கவனிப்பார்கள். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE