சென்னை: மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டத்தில் சேதம் ஏற்பட்டது. இதையடுத்து, வெள்ளத்தால் வாழ்வாதாரம் இழந்த மக்களுக்கு தமிழக அரசுசார்பில் நியாய விலைக்கடை வாயிலாக ரூ.6 ஆயிரம் நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், மத்திய,மாநில அரசு உயர் அதிகாரிகள்,வருமான வரி செலுத்துவோர், சர்க்கரை குடும்ப அட்டைதாரர்கள் பாதிக்கப்பட்டிருந்தால், பாதிப்பை குறிப்பிட்டு விண்ணப்பிக்கலாம் என அரசு தெரிவித்திருந்தது. இந்நிலையில், டோக்கன் பெற்று பணம் வாங்க வரும் பயனாளிகளை விட, விண்ணப்பம் பெற்று நிவாரணம் கோரும் பொதுமக்கள் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. வருமானவரி செலுத்துபவர்களுக்கு இல்லை என்று தெரிவிக்கப்பட்டிருந்தாலும், ஒரே குடியிருப்பில் வருமான வரி செலுத்தும் சிலருக்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது, மற்றவர்களுக்கு வழங்கப்படாமல் உள்ளது.
அதேபோல், தண்ணீரால் சூழப்பட்ட ஒரு தெருவில் உள்ள வீடுகளில் ஒருசில வீடுகளுக்கு நிவாரணம் விடுபட்டுள்ளது. குறிப்பாக ஆவடி காமராஜர் நகர் 10-வது தெருவில் உள்ள அமுதம் நியாயவிலைக்கடைக்கு உட்பட்ட பகுதியில் 630 அட்டைதாரர்கள் உள்ளனர். இதில், சுமார் 100 பேருக்கு நிவாரண உதவிக்கான பட்டியலில் பெயர் இடம் பெறவில்லை என்ற புகார் எழுந்துள்ளது. மேலும் அப்பட்டியலில் குடும்பஅட்டைதாரர்கள் விவரங்கள்ஆங்கிலத்தில் அச்சடிக்கப்பட்டுள்ளதால், ஆங்கிலம் தெரியாதவர்கள் பட்டியலில் தங்கள் பெயர் உள்ளதா? என சரிபார்க்க முடியாமல் அவதிப்பட்டனர்.
இதுதவிர, சில இடங்களில் பட்டியலில் பெயர் இருந்தும் டோக்கன் வழங்கப்படாதால் அவர்களும் நிவாரணம் கோரி விண்ணப்பித்து வருகின்றனர். அதேபோல், விண்ணப்ப படிவங்கள் காலியாக விட்டதாகக் கூறி பொதுமக்கள் திருப்பிஅனுப்பப்படுகின்றனர். மேடவாக்கம் பாபு நகரில் உள்ள நியாயவிலைக் கடையில் நேற்று விண்ணப்பம் இல்லாததால் பொதுமக்கள் திரும்பிச் சென்றனர். இதற்கிடையே, நிவாரணம் கோரி விண்ணப்பிப்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், சம்பந்தப்பட்ட அலுவலர்களே விண்ணப்பம் வழங்குவதை குறைத்து வருவதாகவும் கூறப்படுகிறது. புயல், மழை என்றால் பாதிப்பு என்பது நபருக்கு நபர் வேறுபடும் என்பதால், அரசு உயர்அதிகாரிகள் தலையிட்டு, இதுபோன்ற பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண வேண்டும் என்றும், பயனாளிகள் பட்டியலை வெளிப்படை தன்மையுடன் வெளியிட்டு, உண்மையில் பாதிக்கப்பட்டு நிவாரணம்பெறாதவர்களுக்கு உரிய நிவாரணத்தை வழங்க வேண்டும் என்றுபொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
நிவாரணத் தொகை விநியோகிக்கும் நியாயவிலைக் கடை பணியாளர்கள் கூறியதாவது:
» புலம்பெயர்வோர் மசோதா சட்டமாக்க நடவடிக்கை: அமைச்சர்கள் மஸ்தான், கணேசன் உறுதி
» சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் 5-வது சுற்றில் அர்ஜுன் எரிகைசி வெற்றி
பதில் அளிக்க இயலவில்லை: ‘‘நிவாரணத் தொகையை வரும் 22-ம் தேதி வரை வழங்கும்வகையில் டோக்கன் கொடுக்கும்படியும், 23-ம் தேதி விடுபட்டவர்களுக்கு பொது நாள் என்றும்தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால்,தற்போது இன்றே அனைவரையும் அழைத்து நிவாரணத்தை கொடுத்து முடிக்கும்படி அறிவுறுத்தியுள்ளனர். ஓய்வூதியம் பெறுவோர், வருமான வரி கணக்கு காட்டி, செலுத்தாதவர்கள் என பலரும் பட்டியலில் விடுபட்டுள்ளனர். அவர்கள் எங்களிடம் வந்து இந்த பட்டியலைதயாரித்தது யார் என்று கேட்கும்போது எங்களால் பதிலளிக்க இயலவில்லை. இதனால், சில இடங்களில் பிரச்சினை ஏற்பட்டு வருகிறது’’ என்றனர்.