தூத்துக்குடி வெள்ளத்தில் 2 நாட்களாக சிக்கித் தவித்த அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பத்திரமாக மீட்பு

By ரெ.ஜாய்சன்

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே மழை வெள்ளத்தில் சிக்கித் தவித்த அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணனை தீயணைப்பு துறையினர் மற்றும் காவல் துறையினர் 2 நாட்களுக்கு பிறகு இன்று மீட்டு வெளியே அழைத்து வந்தனர்.

தமிழக மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சராக இருப்பவர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன். திருச்செந்தூர் சட்டப்பேரவை உறுப்பினரான அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளராகவும் இருந்து வருகிறார். தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 17, 18 தேதிகளில் பெய்த மழையால் ஏரல் பகுதியில் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தனர்.

இதையடுத்து அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் கடந்த 18-ம் தேதி மாலை ஏரல் பகுதிக்கு சென்று மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார். பின்னர் அங்கிருந்து தூத்துக்குடி திரும்பியுள்ளார். ஏரல் அருகேயுள்ள உமரிக்காடு பகுதியில் வரும்போது அந்தப் பகுதியில் கடுமையான வெள்ளம் ஏற்பட்டு சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் அமைச்சரால் அங்கிருந்து வர முடியவில்லை.

இதையடுத்து அவருடன் இருந்த கட்சி நிர்வாகிகள் அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணனை பத்திரமாக உமரிக்காடு கிராமத்தில் உள்ள கட்சி நிர்வாகியின் வீட்டுக்கு அழைத்து சென்றுள்ளனர். அந்தப் பகுதியையும் மழை வெள்ளம் சூழந்ததால் அங்கிருந்து அமைச்சரால் கடந்த 2 நாட்களாக வெளியே வரமுடியவில்லை. மேலும், தொலைத் தொடர்பு துண்டிக்கப்பட்டதால் தகவல் தெரிவிக்கவும் இயலவில்லை.

இந்நிலையில் அமைச்சர் உமரிக்காடு கிராமத்தில் சிக்கியிருப்பது குறித்த தகவல் அதிகாரிகளுக்கு தெரியவந்துள்ளது. இதையடுத்து திருநெல்வேலி சரக டிஐஜி பிரவேஷ் குமார் தலைமையில் காவல் துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் இன்று அதிகாலை 5 மணியளவில் அங்கு சென்று அமைச்சரை பத்திரமாக மீட்டு தூத்துக்குடி- திருச்செந்தூர் பிரதான சாலைக்கு அழைத்து வந்தனர். அங்கிருந்து தூத்துக்குடியில் உள்ள இல்லத்துக்கு அமைச்சர் 2 நாட்களுக்கு பிறகு பத்திரமாக வந்து சேர்ந்தார். பின்னர் அமைச்சர் கே.என்.நேரு உள்ளிட்ட அமைச்சர்களுடன் இணைந்து பல்வேறு பகுதிகளில் மழை வெள்ள மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டார். மழை வெள்ளத்தில் அமைச்சரே 2 நாட்கள் சிக்கி தவித்தது தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE