வெள்ள பாதிப்புகளில் இருந்து மெல்ல மீளும் நெல்லை, தென்காசி!

By செய்திப்பிரிவு

திருநெல்வேலி / தென்காசி: திருநெல்வேலி, தென்காசி மாவட்ட ங்கள் வெள்ள பாதிப்புகளில் இருந்து மெல்ல மெல்ல மீண்டு வருகின்றன. மழை குறைந்து, தாமிரபரணியில் வெள்ளம் வடிய தொடங்கியிருப்பதால் இயல்பு நிலை திரும்பி வருகிறது.

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங் களில் ஓரளவுக்கு மழை குறைந்திருப்பதாலும், தாமிரபரணியில் கரைபுரண்ட வெள்ளம் வடிய தொடங்கியிருப்பதாலும் பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர். திருநெல்வேலி கொக்கிரகுளத்தில் நேற்று முன்தினம் ஆற்றுப் பாலத்தை மூழ்கடிக்கும் அளவுக்கு பாய்ந்தோடிய தண்ணீர் மட்டம் நேற்று குறைந்திருந்தது. ஆற்றங்கரையோர பகுதிகளில் உள்ள குடியிருப்புகளை சூழ்ந்தி ருந்த வெள்ளம் பெருமளவுக்கு வடிந்திருக்கிறது.

வெள்ளத்தில் தத்தளித்தவர் களை மீட்கும் பணிக்காக திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்ட கடலோர கிராமங்களில் இருந்து நாட்டுப் படகுகளுடன் அழைத்து வரப்பட்டிருந்த மீனவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு நேற்று திரும்பினர். மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த படகுகள் லாரிகளில் ஏற்றி கொண்டு செல்லப்பட்டன. திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் தண்டவாளத்தை மூழ்கடித் திருந்த வெள்ளம் வடிந்து வருகிறது.

இங்கு குளம்போல் தேங்கியிருந்த தண்ணீரை மோட்டார்கள் மூலம் உறிஞ்சி வெளியேற்றும் பணியில் பணியாளர்கள் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர். திருநெல்வேலி மாநகரில் பல்வேறு இடங்களில் வெள்ளத் தில் மூழ்கி சேதமடைந்த இருசக்கர வாகனங்களை பழுது நீக்குவதற்காக டூவீலர் ஒர்க்ஷாப்களில் ஏராளமானோர் தங்கள் இருசக்கர வாகனங்களை கொண்டு வந்திருந்தனர். இதனால் பல்வேறு இடங்களிலும் இருசக்கர வாகனங்களை பழுதுநீக்கும் பணியில் மெக்கானிக்குகள் முழுவீச்சில் ஈடுபட்டிருந்தனர்.

திருநெல்வேலி டவுன் பெரிய தெரு மற்றும் சுற்றுப் புற தெருக்களில் வெள்ளம் முழுமையாக வடியவில்லை. இதனால் இப்பகுதியில் பேரிடர் மீட்பு குழுவினர் மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். பாளையங்கோட்டை மார்க்கெட், திரு நல்வேலி டவுன் மார்க்கெட், நயினார்குளம் மார்க்கெட் நேற்று வழக்கம் போல் செயல்பட தொடங்கின. பொதுமக்கள் கடைகளுக்கு வந்து காய் கறிகளை வாங்கி சென்றனர்.

பல்வேறு இடங்களில் சாலைகள் துண்டிக்கப்பட்டு வாகன போக்கு வரத்து முடங்கியிருப்பதால் வெளி மாவட்டங்களில் இருந்து காய் கறிகளை கொண்டு வரமுடியாத நிலையுள்ளது. காய்கறிகள் வரத்து குறைந்துள்ளதால் அவற்றின் விலையும் பலமடங்கு அதிகரித்திருப்பதாக வியாபாரிகள் தெரிவித்தனர். திருநகரில் உழவர் சந்தை வழக்கம் போல் நேற்று செயல்பட்டது.

போக்குவரத்து ஓரளவுக்கு சீரானது: திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்தின் எதிரே உள்ள சாராள்தக்கர் கல்லூரி சாலையில் நீர் முற்றிலுமாக வடிந்துள்ளது. வாகனங்கள் சென்று வருகின்றன. இதுபோல் பல்வேறு சாலைகளிலும் தண்ணீர் வடிந்துள்ளதால் போக்குவரத்து சீராகியுள்ளது. திருநெல்வேலி மாநகரில் வெள்ளம் வடியாத சந்திப்பு ரயில் நிலையம், பழைய பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளை தவிர்த்து பெரும்பாலான இடங்களுக்கும் பேருந்து சேவை நேற்று இருந்தது.

புதிய பேருந்து நிலையத்திலிருந்து கடையம் செல்லும் பேருந்து கள் சேரன்மகாதேவி சங்கன் திரடு,முக்கூடல் பொட்டல்புதூர் வழியாக கடையம் செல்கின்றன. பாபநாசம் செல்லும் பேருந்துகள் வழக்கமாக செல்லும் வழித்தடமான சேரன்மகாதேவி, வீரவநல்லூர் கல்லிடைக் குறிச்சி, விக்கிரம சிங்கபுரம் வழியாக பாப நாசம் செல்கின்றன. வண்ணார்பேட்டை வடக்குப் புறவழிச் சாலையில் நீர் வடிந்து வாகனங்கள் செல்லும் வகையில் ஏதுவாக உள்ளன.

ஆனால் சங்கரன்கோவில் பேருந்துகள் இவ்வழியாக செல்ல அனுமதிக்கப்படவில்லை. திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் தொடர் மழையால் குளங்கள் உடைப்பு காரணமாக தென்காசியில் இருந்து திருநெல்வேலி செல்லும் அரசு பேருந்துகள் ஆலங்குளத்தில் இருந்து மாற்றுப் பாதையாக அம்பாசமுத்திரம் - பத்தமடை வழியாக இயக்கப்பட்டு வருகிறது. மழை ஓய்ந்ததால் பாளையங் கோட்டை கிட்டத்தட்ட இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளது. ஒரு சில பகுதிகளில் மட்டும் மின்சாரம் இன்னும் வழங்கப்படவில்லை. அதே நேரத்தில் திருநெல்வேலி டவுன் பகுதிகளில் சில இடங்களில் இயல்பு நிலை திரும்பவில்லை

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE