ராஜீவ்காந்தி கொலை வழக்கில் விடுதலையான முருகனை லண்டனுக்கு அனுப்பி வைக்க முடியாது: உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்

By செய்திப்பிரிவு

சென்னை: முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட நளினி, முருகன்,சாந்தன் உள்ளிட்ட அனைவரையும் விடுதலை செய்து உச்சநீதிமன்றம் கடந்தாண்டு உத்தரவிட்டது. அவர்களில் முருகன், சாந்தன், ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் ஆகியோர் இலங்கை நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதால் திருச்சியில் உள்ள சிறப்பு அகதிகள் முகாமில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் லண்டனில் வசிக்கும் தங்களது மகளுடன், தானும், தனது மனைவியும் ஒன்றாக சேர்ந்துவாழ விரும்புவதால், லண்டன் செல்ல ஏதுவாக பாஸ்போர்ட் பெறுவதற்காக, திருச்சியில் இருந்து சென்னையில் உள்ள இலங்கை துணை தூதரகத்துக்கு வந்து செல்ல அனுமதி கோரி முருகன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், பி.தனபால் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு தரப்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல்ஏ.ஆர்.எல்.சுந்தரேசன் ஆஜராகி, கொலை வழக்கில் குற்றவாளியான இலங்கையைச் சேர்ந்த முருகனை லண்டனுக்கு அனுப்பி வைக்க முடியாது. இலங்கை துணை தூதரகம் உரிய ஆவணங்களை வழங்கினால் மட்டுமே அவரை இலங்கைக்குதிருப்பி அனுப்ப முடியும் என்றார். தமிழக அரசு தரப்பில், பாஸ்போர்ட் பெற திருச்சி சிறப்பு முகாமில் இருந்து சென்னையில் உள்ள இலங்கை துணை தூதரகத்துக்கு முருகனை அழைத்து வர உரிய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படும் என தெரிவிக்கபட்டது. இதைப்பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், முருகனுக்கு பாஸ்போர்ட் வழங்குவதற்காக இலங்கை துணை தூதரகம் நேர்காணலுக்கு அழைக்கும்போது அவருக்கு உரியபாதுகாப்பு வழங்க உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE