“டாஸ்மாக் உள்ள வரை தமிழகம் வளர்ச்சி பெறாது” - அண்ணாமலை பேச்சு

By செய்திப்பிரிவு

விழுப்புரம்: ‘திராவிட மாடல்’ ஆட்சியால் மக்களுக்கு பாதிப்புதான் அதிகம் உள்ளது. டாஸ்மாக் உள்ள வரை தமிழகம் வளர்ச்சி பெறாது என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

தமிழக பாஜக சார்பில், ‘என் மண் - என் மக்கள்’ பிரச்சார நடைபயணத்தை, அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை தமிழகம் முழுவதும் மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக, விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நேற்று அவர் நடை பயணத்தை மேற்கொண்டார்.

அப்போது அவர் பேசியது: ”இந்த பிரச்சாரத்தில் நாங்கள் செல்லும் இடங்களில் மக்கள் சில கோரிக்கைகளை முன்வைக்கின்றனர். அவர்கள் வைக்கும் கோரிக்கைகளைப் பார்த்தால், தமிழகம்வளர்ச்சியடைவில்லை என்பதையே காட்டுகிறது. வேலையில்லாத் திண்டாட்டம், பெண்களின் வாழ்வாதாரம் பாதிப்பு, விவசாயிகள் உற்பத்தி செய்த பொருளுக்கு உரிய விலை கிடைக்காமல் இருப்பது, கிராமங்களில் வளர்ச்சியில்லாமல் இருப்பது; இதுதான் தமிழகத்தின் தற்போதையை நிலை. ‘திராவிட மாடல்’ ஆட்சியின் சாதனை இதுதான்.

தமிழ் மீது பற்று: தமிழகத்தின் அடுத்த முதல்வரை கண்டறிவதற்காக இந்த யாத்திரை நடத்தப்பட்டு வருகிறது. தமிழகம் வளர்ச்சி பெற வேண்டும் என்றால், 2024-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும். திராவிட கட்சிகளால், தமிழகத்தில் ஒரு காலத்திலும் முன்னேற்றத்தையோ, மாற்றத்தையோ கொண்டு வர முடியாது. ஆட்சி மாற்றமே தமிழக முன்னேற்றத்துக்கான ஒரே வழி.

பிரதமர் நரேந்திர மோடி தமிழகமக்கள் மீதும், தமிழ் பண்பாட்டின் மீதும் தீராத பற்று கொண்டவராக உள்ளார். இதற்கு ஆதாரமாக நேற்று முன்தினம் நடைபெற்ற, ‘காசி தமிழ்ச் சங்கமம்’ விழாவில் 5 ஐரோப்பிய மொழிகள் உள்ளிட்ட 16 மொழிகளில் திருக்குறளின் மொழி பெயர்ப்பை வெளியிட்டிருக்கிறார். கடந்தாண்டு 13 மொழிகளில் திருக்குறள் மொழிப்பெயர்க்கப்பட்டு, வெளியிடப்பட்டுள்ளது. மத்திய அரசின் திட்டங்கள் மூலம்ஏழை,எளிய மக்கள் பயன்பெற்று வருகின்றனர். ஆனால், தமிழக அரசு மத்திய அரசின் திட்டங்களை மறைத்து வருகிறது.

எதிர்மறை கருத்துகள்: விழுப்புரம் மாவட்டத்தில் ரூ.4,800 கோடியில் தேசிய நெடுஞ்சாலைத் திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகிறது. கடந்த 9 ஆண்டுகால பாஜக ஆட்சியில் இம்மாவட்டத்தில் மட்டும் 1.77 லட்சம்பேருக்கு மத்திய அரசின் வீடு கட்டும் திட்டம் மூலம் நிதி வழங்கப்பட்டுள்ளது. 2.67 லட்சம் வீடுகளுக்குகுடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

சுமார் 5 லட்சத்துக்கும் அதிகமான விவசாயிகள் வேளாண் நிதியுதவியைப் பெற்று வருகின்றனர். 1.30 லட்சம் பயனாளிகள் சமையல்எரிவாயு இணைப்பை பெற்றுள்ளனர். முத்ரா கடன் வழங்கும் திட்டத்தின் மூலம் ரூ. 5,104 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக விழுப்புரம் மாவட்டத்துக்கு மட்டுமே மத்திய அரசு சுமார் ரூ. 25 ஆயிரம் கோடியை வழங்கியுள்ளது.

ஆனால், திமுகவினர் மத்திய அரசு பற்றி மக்களிடையே எதிர்மறையான கருத்துகளை கூறி வருகின்றனர். மக்களுக்கு வழங்கப் படும் இலவச அரிசிக்கு கிலோ ஒன்றுக்கு மத்திய அரசு ரூ.32 மானியம் வழங்குகிறது. தமிழக அரசு ரூ. 2 மட்டும் வழங்குகிறது. சாராய ஆலை உரிமையாளர்கள் வருவாய் ஈட்ட வேண்டும் என்பதற்காகவே டாஸ்மாக் கடைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

டாஸ்மாக் உள்ள வரை தமிழகம் கல்வியிலும், பொருளாதாரத்திலும் வளர்ச்சி பெறாது. பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சியில் தமிழகத்தைச் சேர்ந்த எம்.பிக்களும் இடம் பெற வேண்டும்.அதற்காக ஒரே ஒரு முறை பாஜக-வுக்கு தமிழக மக்கள் வாக்களிக்க வேண்டும்.

தமிழகத்துக்கு ‘மோடி வாகனம்’ என்ற பெயரில் 130 வாகனங்கள் அனைத்து கிராமங்களுக்கும் வரவுள்ளன. மத்திய அரசின் அதிகாரிகள் அந்த வாகனத்தில் இருப்பார்கள். அவர்கள், மத்திய அரசின் திட்டங்களை மக்களிடையே விளக்கி, அதற்கான மனுக்களை அங்கேயே கொடுத்து, பூர்த்தி செய்து பெறுவார்கள்.

இந்திய மாநிலங்களில் எங்கே தேர்தல் நடந்தாலும் பாஜக மட்டுமே வெற்றி பெறுவதற்கு காரணம் மத்திய அரசின் சாதனைகள் தான்.இதை தமிழக மக்களும் உணர வேண்டும். ஊழல்வாதிகள் வசம் தமிழகம் இருக்கக் கூடாது. இவ் வாறு அவர் பேசினார்.

இந்த பிரச்சார நடைபயணத்தில் பாஜக மாநிலத் துணைத் தலைவர் ஏ.ஜி.சம்பத், மாநிலச் செயலர் வினோஜ் பி.செல்வம், விழுப்புரம் தெற்கு மாவட்டத் தலைவர் வி.ஏ.டி.கலிவரதன், வடக்கு மாவட்டத் தலைவர் ஏ.டி.ராஜேந்திரன் உள் ளிட்ட பாஜக நிர்வாகிகள், கட்சித் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE