சதுரகிரி கோயிலில் தங்கியிருந்த 104 பக்தர்கள் பத்திரமாக மீட்பு

By செய்திப்பிரிவு

வத்திராயிருப்பு: தொடர் மழை காரணமாக, சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் தங்க வைக்கப்பட்டிருந்த 104 பக்தர்களை, வனத்துறையினர் நேற்று கயிறு கட்டி பத்திரமாக மீட்டனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் - மேகமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட சாப்டூர் வனச்சரகத்தில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் மார்கழி மாத பிறப்பையொட்டி, கடந்த 17-ம் தேதி பக்தர்கள் மலை யேறி சென்று சுவாமி தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டது. இதில், 1,500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் சதுரகிரி மலையேறி சென்று வழிபாடு நடத்தினர். அப்போது, மாலை நேரத்தில் மழை பெய்ய தொடங்கியது.

தொடர்ந்து மழை பெய்ததால், சதுரகிரி செல்லும் வழியில் உள்ள மாங்கனி ஓடை, சங்கிலிப் பாறை, வழுக்குப் பாறை உள்ளிட்ட ஓடைகளில் நீர்வரத்து அதிகரித்தது. இதனால், 104 பக்தர்கள் மலைக் கோயிலிலேயே தங்க வைக்கப்பட்டனர். நேற்று காலை மழை நின்றதை அடுத்து, 104 பக்தர்களும் வனத்துறை பாதுகாப்புடன் மலை இறங்க தொடங்கினர்.

வனத்துறை மற்றும் பேரிடர் மீட்புத் துறையினர், ஓடையின் குறுக்கே கயிறு கட்டி பக்தர்களை மீட்டனர். பின்னர், பிற்பகலில் பக்தர்கள் அடிவாரத்துக்கு பத்திரமாக அழைத்து வரப்பட்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE