போக்குவரத்துக் கழகங்களுக்கு பயணச்சீட்டு கருவியை வழங்க பாரத ஸ்டேட் வங்கி திட்டம்

By செய்திப்பிரிவு

சென்னை: போக்குவரத்துக் கழகங்களுக்கு 38 ஆயிரம் பயணச்சீட்டு கருவிகளை இலவசமாக வழங்க பாரத ஸ்டேட் வங்கி தயாராக உள்ளது.

தமிழகம் முழுவதும் 8 போக்குவரத்துக் கழகங்கள் மூலம் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதில் நாள்தோறும் 1.55 கோடிக்கும் அதிகமானோர் பயணித்து வருகின்றனர். அவர்களுக்கு பயணச்சீட்டு வழங்கும் வகையில் மின்னணு பயணச்சீட்டு கருவிகள் 16 ஆண்டுகளுக்கு முன்னதாகவே அமல்படுத்தப்பட்டன. அதன் பின்னர் கடந்த 2011-ம் ஆண்டு அதி நவீனபயணச்சீட்டு கருவிகள் மூலம் பயணச்சீட்டு வழங்க அரசு திட்டமிட்டது.

இத்திட்டம் மத்திய அரசின் நிதியுதவியுடன் சுமார் ரூ.20 கோடி மதிப்பீட்டில் படிப்படியாக செயல்படுத்தப்பட்டு, சுமார் 30 ஆயிரம் கருவிகள் ஒப்பந்த அடிப்படையில் வாங்கப்பட்டன. எனினும், புதிதாக வாங்கப்பட்ட கருவிகளில் பல்வேறு சிக்கல்கள் இருந்ததால் அவை திரும்பப் பெறப்பட்டன. இந்நிலையில் மீண்டும் பயணச்சீட்டு கருவி மூலம் பயணச்சீட்டு வழங்குவதற்கான நடவடிக்கைகளை போக்குவரத்துத் துறை தீவிரப்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக போக்குவரத்துக் கழக உயரதிகாரிகள் கூறியதாவது: ஒரே அட்டையைப் பயன்படுத்தி பொதுப் போக்குவரத்து வாகனங்கள் அனைத்திலும் பயணச்சீட்டு பெறும் வகையில் என்சிஎம்சி என்ற அட்டையை கடந்த ஆண்டு மத்திய அரசு அறிமுகம் செய்தது. இந்த அட்டையை பிரபலப்படுத்த மத்திய அரசு முனைப்புகாட்டி வருகிறது. இதைப் பயன்படுத்த வேண்டுமானால் பொது போக்குவரத்தில் பயணச்சீட்டு கருவியின் பயன்பாடு அவசியம். எனவே, சுமார் 38 ஆயிரம் பயணச்சீட்டு கருவிகள் வரை போக்குவரத்துக் கழகங்களுக்கு இலவசமாக வழங்க பாரத ஸ்டேட் வங்கி தயாராக உள்ளது.

இது வெற்றியடையும் பட்சத்தில் முதல்வர் இத்திட்டத்தைத் தொடங்கி வைப்பார். இந்த கருவிகளுக்கான சர்வர், காகித பயன்பாடு மட்டுமே போக்குவரத்துக் கழகங்களுக்கான செலவினங்களாக இருக்கும் என்று தெரிவித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE