எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்ட மீனவர்கள் சாலை மறியல்: மீனவ குடும்பத்தினருக்கு ரூ.12,500, படகுக்கு ரூ.10 ஆயிரம் நிவாரணம் - தமிழக அரசு அறிவிப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: எண்ணூர் கடல் பகுதியில் எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்ட மீனவர்கள் தங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் எனக் கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர். இதற்கிடையே, பாதிக்கப்பட்ட மீனவர் குடும்பங்களுக்கு தலா ரூ.12,500-ம், படகு ஒன்றுக்கு ரூ.10 ஆயிரமும் நிவாரணம் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

சென்னையில் மிக்ஜாம் புயல் காரணமாக ஏற்பட்ட வெள்ளப் பெருக்கின்போது, எண்ணூர் கடல் முகத்துவார பகுதியில் எண்ணெய் கசிவு கலந்தது. இதனால், அப்பகுதியில் உள்ள 8 மீனவ கிராமங்கள் பாதிக்கப்பட்டன.

குறிப்பாக, மீனவர்களின் படகுகள், வலைகள் உள்ளிட்டவை சேதம் அடைந்து மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிப்படைந்தது. எண்ணெய் கசிவை அகற்றும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

வாழ்வாதாரம் பாதிப்பு: இந்நிலையில், இந்த எண்ணெய் கசிவால் தங்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, தாழங்குப்பம் பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் நேற்று திடீரென மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, எண்ணெய் படலத்தால் சேதம் அடைந்த படகு மற்றும் வலைகளை சாலையில் போட்டனர்.

மறியலில் ஈடுபட்ட மீனவர்கள் கூறுகையில், கடலில் எண்ணெய் கசிவு ஏற்பட்டு 15 நாட்களாகியும் இதுவரை எங்களுக்கு நிவாரணம் வழங்கப்படவில்லை. எண்ணெய் கசிவும் முற்றிலுமாக அகற்றப்படவில்லை. வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதால் எங்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து எண்ணூர் காவல் இணை ஆணையர் விஜயகுமார், எம்எல்ஏ கே.பி.சங்கர் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. இதனால், போராட்டம் 3 மணி நேரத்துக்கும் மேலாக நீடித்தது.

பின்னர், சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே,சென்னை மண்டலம் 1-ன் கண்காணிப்பு அதிகாரி கந்தசாமி ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று மீனவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், உடன்பாடு ஏற்பட்டதையடுத்து மீனவர்கள் தங்கள் போராட்டத்தைக் கைவிட்டனர்.

பின்னர், கண்காணிப்பு அதிகாரி கந்தசாமி செய்தியாளர்களிடம் கூறுகையில், மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசு வழங்கும் ரூ.6 ஆயிரம் நிவாரணத் தொகை எண்ணூர் பகுதியில் உள்ள மீனவர் குடும்பங்களுக்கும் வழங்கப்படும்.

அதைத் தவிர, எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்ட மீனவர் குடும்பங்களுக்கு கூடுதலாக ஒரு குடும்பத்துக்கு ரூ.12,500-ம், படகு வைத்திருப்பவர்களுக்கு ஒரு படகுக்கு ரூ.10 ஆயிரமும் வழங்கப்படும். இதற்காக,மீனவர்களின் வங்கிக் கணக்கு விவரங்கள் சேகரிக்கப்படுகிறது. 3 முதல் 4 நாட்களுக்குள் இந்த நிவாரணத் தொகை அவர்களது வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என்றார்.

இதற்கிடையே, தமிழக அரசு அறிவித்துள்ள நிவாரணம் தங்களுக்கு போதவில்லை என மீனவர் அமைப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து, தென்னிந்திய மீனவர் நல சங்கத்தின் தலைவர் கு.பாரதி கூறுகையில், எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்ட படகுகளுக்கு ரூ.10 ஆயிரம் நிவாரணம் வழங்குவதாக அரசு அறிவித்திருப்பது போதுமானதாக இல்லை. குறைந்தபட்சம் ஒரு படகுக்கு ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். அதேபோல், மீனவர் குடும்பங்களுக்கும் நிவாரணத் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE