இலக்கியம், கல்வி உள்ளிட்ட 8 பிரிவுகளில் சிறப்பாக செயல்பட்ட அயலக தமிழர்களுக்கு விருது: ஜனவரியில் முதல்வர் வழங்குகிறார்

By செய்திப்பிரிவு

சென்னை: அடுத்தாண்டு ஜனவரி மாதம் சென்னையில் நடைபெறும் அயலக தமிழர் தின விழாவில், இலக்கியம், கல்வி உள்ளிட்ட8 பிரிவுகளில் சிறப்பான செயல் பாடுகளுக்கான விருதுகள் வழங்கப்பட உள்ளன. இதற்காக இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

அயலக தமிழர் தினம்: ஆண்டுதோறும் ஜன.12-ம் தேதிஅயலக தமிழர் தினமாக கொண்டாடப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்ததன் அடிப்படையில், 2022 மற்றும் 2023-ம்ஆண்டுகளில் அயலகத் தமிழர்தினம் சிறப்பாகக் கொண்டாடப் பட்டது.

தொடர்ந்து 3-ம் ஆண்டாக ‘அயலகத் தமிழர் தினம் 2024’ விழா, அடுத்தாண்டு ஜன.11, 12 ஆகிய தினங்களில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ‘தமிழ் வெல்லும்’ என்ற கருப்பொருளில் நடைபெற உள்ளது.

சென்னை வர்த்தக மையத்தில் நடைபெறும் இவ்விழாவில், பல்வேறு கலை நிகழ்ச்சிகள், அமர்வுகள், சிறப்பு கண்காட்சிகள் நடத்தப்பட உள்ளன. இந்நிகழ்ச்சியை மேலும் சிறப்பிக்கும் விதமாக, தமிழ் இலக்கியம், கல்வி, சமூக மேம்பாடு, மகளிர்,வணிகம், அறிவியல் தொழில்நுட்பம், விளையாட்டு, மருத்துவம் ஆகிய 8 பிரிவுகளில் சிறந்து விளங்கும் தமிழர்களுக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் விருது வழங்கி கவுரவிக்கிறார்.

ஆன்லைனில் விண்ணப்பம்: எனவே, அயல்நாடுகளில் மேற்கண்ட 8 துறைகளில் தலைசிறந்து விளங்கும் தமிழர்கள் அயலகத் தமிழர் நலத்துறையின் https://nrtamils.tn.gov.in/en/ என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பங்களை அனுப்பி வைக்கலாம் அயலகத் தமிழர் தினத்தில் பங்கேற்பது, மற்றும் நிகழ்வுகள் தொடர்பான விவரங்களுக்கு அயலகத் தமிழர் நலத்துறையின் வலைதளத்தில்­­­ அறிந்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE