மருத்துவர் இறப்புக்கு பணிச்சுமை காரணம் இல்லை: சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனை டீன் விளக்கம்

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை மருத்துவர் மருதுபாண்டியன் இறப்புக்கு பணிச்சுமை காரணம் இல்லை என்று டீன் தேரணிராஜன் விளக்கம் அளித்துள்ளார். சென்னை மருத்துவக் கல்லூரியுடன் (எம்எம்சி) இணைந்த ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வந்தவர் மருதுபாண்டியன் (30). கடந்த 10-ம்தேதி பணி முடிந்து வீட்டுக்கு சென்ற அவர், மர்மமான முறையில் உயிரிழந்தார். இதையடுத்து, அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. மருத்துவர் மருந்துபாண்டியன் உயிரிழப்புக்கு பணிச்சுமையே காரணம் என மருத்துவர்கள் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், அதனை மறுத்து ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை டீன் தேரணிராஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மருத்துவர் மருதுபாண்டியன் சென்னை மருத்துவக் கல்லூரியில் பொது அறுவையியல் பட்ட மேற்படிப்பு படித்தார். பின்னர், சென்னை மருத்துவக் கல்லூரியிலேயே பொது அறுவையியல் துறையில் உதவி அறுவை சிகிச்சை பேராசிரியராக பணியாற்றினார். குடல் இரைப்பை அறுவை சிகிச்சை துறையில் உயர் சிறப்பு மருத்துவ படிப்பில் (எம்சிஎச்) சேர்ந்தார். துறைக்குப் புதிய மாணவரானதால், துறையின் வழக்கப்படி துறை சார்ந்த பணிகள் பற்றி அறிமுகம் ஆவதற்காக மருத்துவர் மருதுபாண்டியன் ஒரு பார்வையாளராகதான் நடத்தப்பட்டு வந்தார். அவரது அகால மரணம் சென்னை மருத்துவக் கல்லூரியின் மருத்துவர்கள் மற்றும் நிர்வாகத்தினரைத் துயரில் ஆழ்த்தியுள்ளது. முறையான உறுப்புப் பரிசோதனைகள் முடிந்த பின்னர்தான் அவரது இறப்புக்கான முழுமையான காரணம் தெரியும். பணிச்சுமையால் அவர் இறந்து விட்டார் என்ற கருத்தும், தொடர்ந்து 36 மணிநேரம் பணியில் இருந்தார் என்பதும் முற்றிலும் தவறானது. இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE