கோடநாடு வழக்கில் நேரில் ஆஜராகி சாட்சியம் அளிக்க எடப்பாடி பழனிசாமிக்கு விலக்கு அளித்தது ஐகோர்ட்

By ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: கோடநாடு கொலை கொள்ளை வழக்கில், நேரில் ஆஜராகி சாட்சியம் அளிக்க எடப்பாடி பழனிசாமிக்கு விலக்கு அளித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம். அவரது சாட்சியங்களைப் பதிவு செய்ய வழக்கறிஞர் ஆணையரை நியமித்து உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனுவில், “கோடநாடு விவகாரத்தில் தன்னை தொடர்புபடுத்தி தனபால் பேச தடை விதிக்கக் கோரி முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான பழனிசாமி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அதில், அதிமுகவின் பொதுச் செயலாளர் என்ற முறையில் தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் நோக்கில் தனபால், இந்த வழக்கில் தன்னை தொடர்புபடுத்தி பொய்யான தகவல்களை பொது வெளியில் கூறி வருகிறார்.

அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அதிமுகவுக்கு மக்கள் மத்தியில் இருக்கும் செல்வாக்கை குலைக்கும் நோக்கத்தில், தனது அரசியல் எதிரிகளின் தூண்டுதலின் பேரில் தனபால் இதுபோல பேட்டியளித்து வருகிறார். அவர் ஏற்கெனவே இந்த வழக்கில் சாட்சிகளை கலைத்ததாக கைது செய்யப்பட்டவர். மேலும், தான் மன நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி ஜாமீன் பெற்றுள்ளார். எனவே, இந்த வழக்கில் தன்னை தொடர்புபடுத்தி பேச அவருக்கு தடை விதிக்க வேண்டும்” என கோரியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், கோடநாடு கொலை கொள்ளை வழக்கில் எடப்பாடி பழனிசாமியை தொடர்புபடுத்தி பேச தனபாலுக்கு நிரந்தர தடை விதித்து உத்தரவிட்டிருந்தது.மேலும், இந்த வழக்கில் சாட்சியங்களைப் பதிவு செய்வதற்காக மாஸ்டர் நீதிமன்றத்து அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் எட்பபாடி பழனிசாமி மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், “உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாஸ்டர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி சாட்சியம் அளிக்க இயலாது. தமது வீட்டில் சாட்சியத்தை பதிவுசெய்ய வழக்கறிஞர் ஆணையர் ஒருவரை நியமிக்க வேண்டும். தற்போது எதிர்க்கட்சித் தலைவராக உள்ள தனக்குள்ள பாதுகாப்பு வழிமுறைகள் காரணமாக, உயர் நீதிமன்ற வளாகத்துக்கு வரும்போது, மற்ற வழக்காடிகளுக்கு பாதிப்பு ஏற்படக்கூடும்.

இந்த சிக்கல்களை தவிர்ப்பதற்கவே வழக்கறிஞர் ஆணையர் ஒருவரை நியமிக்க வேண்டும்.மாஸ்டர் நீதிமன்றத்தில் ஆஜராவதை வேண்டுமென்றே தவிர்க்கவில்லை. அனைத்து சட்ட நடைமுறைகளையும் பின்பற்ற தயாராக இருக்கிறேன். வழக்கறிஞர் ஆணையரை நியமிக்க வேண்டுமென்ற இந்த மனுவை ஏற்காவிட்டால், அது தனக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பை ஏற்படுத்தும்” என மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு, நீதிபதி என்.சதீஷ்குமார் முன்பு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. எடப்பாடி பழனிசாமியின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு, வழக்கறிஞர் ஆணையராக எஸ்.கார்த்திகை பாலனை நியமித்து உத்தரவிட்டார். சாட்சியத்தை ஒரு மாதத்துக்குள் பதிவு செய்து, அதன் அறிக்கையாக ஜன.12ம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதி பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE