சென்னை: அதிமுக பெயர், கொடி, சின்னம், லெட்டர்பேடு ஆகியவற்றைப் பயன்படுத்த விதிக்கப்பட்ட தடையை மீறவில்லை என ஓபிஎஸ் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது.
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது தரப்பினர் கட்சியின் பெயர், கொடி, சி்ன்னம் மற்றும் லெட்டர்பேடு போன்றவற்றை பயன்படுத்த தடை விதிக்கக் கோரி அதிமுக பொதுச் செயலாளரான பழனிசாமி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.சதீஷ்குமார், அதிமுக பெயர், கொடி, சி்ன்னம் மற்றும் லெட்டர்பேடு ஆகியவற்றைப் பயன்படுத்த ஓபிஎஸ் தரப்புக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டார்.
இந்நிலையில், இபிஎஸ் தொடர்ந்திருந்த வழக்கு விசாரணை நீதிபதி என்.சதீஷ்குமார் முன்பாக நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அவரது தரப்பில் ஓபிஎஸ் தரப்புக்கு விதிக்கப்பட்ட தடையை நீட்டிக்க வேண்டுமென வாதிடப்பட்டது. அதற்கு ஓபிஎஸ் தரப்பு, மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்டுள்ளதால் இந்த வழக்கு விசாரணையையும் தள்ளிவைக்க வேண்டும் என்றும். தற்போது வரை உயர் நீதிமன்றம் விதித்துள்ள இடைக்காலத் தடையை மீறவில்லை என்றும் விளக்கமளித்தார்.
அதையடுத்து நீதிபதி, இந்த வழக்கு விசாரணையைஜன.22-ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார்.