சென்னை: கொருக்குப்பேட்டையில் திமுக எம்எல்ஏ - பொதுமக்களிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அண்மையில் ஏற்பட்ட புயல் மற்றும் மழையால் சென்னையின் பல்வேறு பகுதிகள் தண்ணீரில் மூழ்கின. மீட்புப் பணியில் அரசு ஈடுபட்டுள்ளது. இருப்பினும் மழை மீட்பு பணியில் அரசு எதிர்பார்த்த அளவில் செயல்படவில்லை என்றும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரண உதவி வழங்கப்படவில்லை என்றும் எதிர்க்கட்சியினர் குற்றச்சாட்டினர்.
இந்நிலையில், ஆர்.கே.நகர் சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட கொருக்குப்பேட்டை சுண்ணாம்பு கால்வாய் பகுதியில் நிவாரண உதவிகளுக்கான டோக்கன் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது, சிலர் அந்த தொகுதியைச் சேர்ந்த திமுக எல்எல்ஏ எபினேசர் மற்றும் அவரது ஆதரவாளர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த எம்எல்ஏவும் பதிலுக்கு பொதுமக்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது அவர்களிடைய தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.