பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் | ஆளுநர் மாளிகை முன்பு என்ஐஏ அதிகாரிகள் ஆய்வு: ஆயுதப்படை காவலரிடம் விசாரணை

By செய்திப்பிரிவு

சென்னை: பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆளுநர் மாளிகை முன்பு என்ஐஏ அதிகாரிகள் நேற்றுஆய்வு செய்தனர். சம்பவம் நடந்தபோது, அங்கு பணியில் இருந்த ஆயுதப்படை காவலரிடமும் விசாரணை நடத்தினர்.

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையின் நுழைவு வாயில் அருகே மர்மநபர் ஒருவர்,கடந்த அக்.25-ம் தேதி மதியம்பெட்ரோல் குண்டை வீசினார். நுழைவாயில் முன்பு வைக்கப்பட்டிருந்த இரும்பு தடுப்புகள் முன் பெட்ரோல் குண்டு விழுந்து லேசாக தீப்பற்றி எரிந்தது.

இதையடுத்து, அந்த நபரை விரட்டி பிடித்த போலீஸார், அவரிடம் இருந்த மேலும் 2 பெட்ரோல் குண்டுகளைக் கைப்பற்றினர். அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், அவர் சென்னை நந்தனம் எஸ்.எம்.நகரை சேர்ந்த பிரபல ரவுடி கருக்கா வினோத்(42) என்பதுதெரியவந்தது. மேலும், ‘நீட் தேர்வு ரத்துக்கு ஒப்புதல் அளிக்காததால், ஆத்திரத்தில் பெட்ரோல் குண்டு வீசினேன்’ என அவர் வாக்குமூலம் அளித்ததாக போலீஸார் தெரிவித்தனர்.

இதுகுறித்து கிண்டி போலீஸார் விசாரணை நடத்தி வந்த நிலையில், இந்த வழக்கு விசாரணை கடந்தமாதம் என்ஐஏவிடம் ஒப்படைக்கப்பட்டது. வழக்கு தொடர்பான ஆவணங்களையும் என்ஐஏ.விடம் போலீஸார், ஒப்படைத்தனர். இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக என்ஐஏ அதிகாரிகள் தங்களது முதற்கட்ட விசாரணையை தொடங்கி உள்ளனர்.

அதன்படி கிண்டி ஆளுநர் மாளிகையின் முன்பு என்ஐஏ அதிகாரிகள் நேற்று காலை ஆய்வில் ஈடுபட்டனர். அப்போது, பெட்ரோல் குண்டு வீசப்பட்ட இடத்தை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். பெட்ரோல் குண்டு எங்கிருந்து வீசப்பட்டது, எங்கிருந்து பெட்ரோல் குண்டு அவர் கொண்டு வந்திருப்பார், எவ்வளவு தூரத்தில் இருந்து பெட்ரோல்குண்டுகளை அவர் வீசினார், போலீஸார் அவரை எங்கு வைத்து பிடித்தனர் என்பது குறித்து பல்வேறு கோணங்களில் என்ஐஏ அதிகாரிகள் ஆய்வு செய்தனர். மேலும், அந்த பகுதியை டேப் மூலம் அளந்து தடயங்களைச் சேகரித்தனர்.

சுமார் 1 மணி நேரத்துக்கு மேலாகஇந்த ஆய்வு நடந்தது. பின்னர், இந்த சம்பவத்தின்போது ஆளுநர்மாளிகையில் பணியில் இருந்தஆயுதப்படை காவலர் சில்வானுவை விசாரணைக்காக என்ஐஏ அதிகாரிகள் புரசைவாக்கம் அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரிடம் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டது.

காவலில் எடுக்க மனு: இதற்கிடையே, ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள கருக்கா வினோத்தை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க பூந்தமல்லியில் உள்ள வெடிகுண்டு வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் என்ஐஏ அதிகாரிகள் மனுத்தாக்கல் செய்துள்ளனர்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE