சென்னை: சென்னை பெருநகர குடிநீர் வழங்கல், கழிவுநீர் அகற்று வாரியத்தின் இணை இயக்குநர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: புயல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட, சென்னை மாநகராட்சியின் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு கடந்த 7-ம் தேதிமட்டும் 42 நீர் நிரப்பும் நிலையங்களில் இருந்து 444 லாரிகள் மூலம் 4,227 நடைகள் பாதுகாக்கப்பட்ட குடிநீர் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியகுடியிருப்பு மக்கள், 74 நிவாரண முகாம்கள் மற்றும் அங்கு தங்கியுள்ளவர்கள், உணவு தயாரிக்கும் கூடங்களுக்கு லாரிகள் மூலம் நேரடியாக குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. 263 இடங்களில்மோட்டார் மூலம் மழைநீர் வெளியேற்றப்பட்டுள்ளது.
மேலும், 116 அதிவேக நீர் உறிஞ்சும் இயந்திரங்கள் மூலம் கழிவுநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. 476 தூர்வாரும் இயந்திரங்கள் மூலம் பிரதான கழிவுநீர்குழாய்களில் உள்ள அடைப்புகள் அகற்றப்பட்டு வருகின்றன. 325 கழிவுநீர் உந்து நிலையங்களில் 179 ஜெனரேட்டர்களை கொண்டு 24 மணி நேரமும் செயல்படும் வகையில் கழிவுநீர் அகற்றும்பணி தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுவரை 45 லட்சம் குளோரின் மாத்திரைகள் வழங்கப்பட்டுள்ளன என அதில் கூறப்பட்டுள்ளது.