குடும்பத்துக்கு தலா ரூ.10 ஆயிரம் நிவாரணம்: அரசுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் வேண்டுகோள்

By செய்திப்பிரிவு

சென்னை: வெள்ளம் பாதித்த குடும்பங்களுக்கு தலா ரூ.10,000 நிவாரணம் வழங்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தமிழக அரசை கேட்டுக்கொண்டுள்ளார்.

இதுகுறித்து நேற்று அவர் வெளியிட்ட அறிக்கை: மிக்ஜாம் புயல் பெரும் பாதிப்புகளையும், உயிரிழப்புகளையும் ஏற்படுத்திச் சென்றிருக்கிறது. மிக்ஜாம் புயல்குறித்த முன்னறிவிப்பு 10 நாட்களுக்கு முன்பாகவே வெளியிடப்பட்டுவிட்ட போதிலும், புயலால் மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளை தடுப்பதிலும், குறைப்பதிலும் தமிழக அரசு தோல்வி அடைந்து விட்டது.

மூன்று நாட்களாகிவிட்ட நிலையில், சென்னையின் பெரும்பான்மையான பகுதிகளில் மழைநீர் வடியவில்லை. உண்மையாகவே நிவாரணப் பணிகளை விரைவுபடுத்தி, மக்களின் துயரங்களைப் போக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கூடுதலான பணியாளர்கள், ஐஏஎஸ்அதிகாரிகளை அனுப்ப வேண்டும்.

மழை - வெள்ளத்தால் சென்னைமற்றும் புறநகர் மாவட்டங்களில் அனைத்து குடும்பங்களும் பொருளாதார இழப்பையும், வாழ்வாதார இழப்பையும் சந்தித்துள்ளன. சென்னை மாநகர மக்களின் துயரங்களை ஓரளவாவது போக்கும் வகையில், ஒவ்வொரு குடும்பத்துக்கும் குறைந்தபட்சம் தலா ரூ.10,000 நிதி உதவி வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE