சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தொடர் மழையால், பல இடங்களில் ரயில் தண்டவாளத்தில் மழைநீர் தேங்கி, ரயில் சேவை முடங்கியது. சென்னை சென்ட்ரல் - திருவள்ளூர் தடத்தில் பேசின்பாலம் - வியாசர்பாடி இடையே 14-வது பாலத்தில் மழைநீர் தேங்கியது. இதுதவிர, ஆவடி ரயில் நிலையம் அருகே தண்டவாளம் மழைநீரில் மூழ்கியது.
இதுபோல, சென்னை கடற்கரை - தாம்பரம் வழித்தடத்தில் எழும்பூர் - பூங்கா ரயில் நிலையம் இடையே, தாம்பரம் - பல்லாவரம் இடையே, பரங்கிமலை ரயில் நிலையத்திலும் மழைநீர் தேங்கி நின்றது. இதனால், புறநகர் ரயில் சேவை நேற்று காலை 8 மணி நேரம் வரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. மழை தொடர்ந்ததால், புறநகர் ரயில் சேவை முழுமையாக ரத்து செய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து, ஒவ்வொரு மணி நேரத்துக்கும் ஒரு சிறப்பு மின்சார ரயில் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த ரயில்கள் போதிய அளவு இல்லாததால், பயணிகள் கடும் அவதியடைந்தனர்.
சில மணி நேரம் காத்திருந்து, பேருந்தில் ஏறிச் சென்றனர்.