உரிமம் இல்லாமல் விளம்பரப் பலகை வைத்தால் 3 ஆண்டு சிறை: சென்னை மாநகராட்சி எச்சரிக்கை

By செய்திப்பிரிவு

உரிமம் இல்லாமல் விளம்பரப் பலகைகள் வைக்கும் தனியார், விளம்பர நிறுவனங்கள் மீது மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது ஒரு விளம்பர பலகைகக்கு ரூபாய். பத்தாயிரம் வீதம் அபாரதம் என பெருநகர சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

இது குறித்து  சென்னை மாநகராட்சி இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், ''பெருநகர சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மண்டலம் 1 முதல் 15 வரை (வார்டு எண். 1 முதல் 200 வரை) அனுமதியில்லாமல் விளம்பரப் பலகைகள், டிஜிட்டல் பேனர்கள், பதாகைகள் மற்றும் சுவர் விளம்பரங்கள் மேற்கொள்ளும் தனியர்கள் மீது அல்லது தனியார் விளம்பர நிறுவனங்கள் மீது சென்னை மாநகராட்சி முனிசிபல் சட்டம் விதி எண். 326-ன்படி அத்தனியர் அல்லது தனியார் விளம்பர நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

அவ்வாறு விளம்பரபடுத்தியது தெரியவந்தால் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்து முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து அதன் பொருட்டு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது அனுமதியில்லாமல் வைக்கப்பட்ட ஒரு விளம்பரப் பலகைகக்கு ரூபாய். பத்தாயிரம் வீதம் (ரூ.10,000/-) தண்ட தொகையாகவே அல்லது இரண்டும் சேர்ந்தோ நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

கட்டிட உரிமையாளர்கள் தங்களுக்கு சொந்தமான கட்டிடத்தில் விளம்பரப் பலகைகள் அமைத்து விளம்பரம் மேற்கொள்ள அனுமதிக்கும் பட்சத்தில் அவ்விளம்பர நிறுவனங்கள் பெருநகர சென்னை மாநகராட்சியிடம் உரிமம் பெற்றிருந்தால் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும்.

அவ்வாறு உரிமம் இல்லாமல் விளம்பரப் பலகை அமைக்க கட்டிடத்தின் உரிமையாளர் அனுமதிக்கும் பட்சத்தில் பெருநகர சென்னை மாநகராட்சியால் கட்டிடத்தின் உரிமையாளர் மீது உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கப்படுகிறது.''

இவ்வாறு சென்னை மாநகராட்சி செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE