4 மாவட்டங்களுக்கு நாளை பொது விடுமுறை: வீட்டிலிருந்து பணிபுரிய அனுமதிக்க தனியார் நிறுவனங்களுக்கு அரசு அறிவுறுத்தல்

By செய்திப்பிரிவு

சென்னை: மிக்ஜாம் புயல் காரணமாக கனமழை, வெள்ளம் என இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ள நிலையில் நாளை டிச.5 ஆம் தேதி சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களுக்கு நாளையும் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் தனியார் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்து பணி புரிய அனுமதிக்குமாறு அரசு அறிவுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக வெளியிட்டப்பட்ட செய்திக் குறிப்பில், மிக்ஜாம் புயல் இன்று பிற்பகல் 2.30 மணி நிலவரப்படி தென்மேற்கு வங்கக்கடலில், புதுச்சேரியில் இருந்து 250 கிமீ கிழக்கு - தென்கிழக்காகவும், சென்னையில் இருந்து 380 கிமீ தென் கிழக்காகவும், நெல்லூரில் இருந்து 380 கிமீ தெற்கு - தென்கிழக்காகவும் ஆகவும் நிலை கொண்டுள்ளது. இது மேலும் வலுவடைந்து 4.12.23 திங்கட்கிழமை முற்பகல் தமிழ்நாட்டின் வடக்கு கடற்கரைப் பகுதியை நோக்கி நகர்ந்து வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் சென்னை திருவள்ளூர் காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிக கனத்த மழையுடன் புயல் காற்றும் வீச வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

புயல் கரையைக் கடக்கும் பொழுது சாலைகளில் மழையின் காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்படவும், காற்று வேகத்தின் காரணமாக மரங்கள் சாய்ந்து விழவும், மின்கடத்திக் கம்பிகள் அறுந்து விடவும் வாய்ப்பு இருப்பதன் காரணமாக பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய அறிவுரைகளை தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையம் செய்தியாக வெளியிட்டுள்ளது.

அரசும் அத்தியாவசியப் பணிகளான காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள், உள்ளாட்சி அமைப்புகள், மருத்துவமனைகள், மின்சாரம், பால், குடிநீர் விநியோகம், உணவகங்கள் போன்ற அமைப்புகளின் பணியாளர்களைத் தவிர இம் மாவட்டங்களில் செயல்படும் பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலகங்கள், வங்கிகள், நிதி நிறுவனங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு நாளை (05.12.2023) ஒரு நாள் பொது விடுமுறை என அறிவித்துள்ளது.

இந்நிலையில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள தனியார் நிறுவனங்கள் மற்றும் அலுவலகங்கள் இயன்றவரை தங்கள் பணியாளர்களை வீட்டிலிருந்தபடியே பணி செய்ய (Work From Home) அறிவுறுத்துமாறும் தவிர்க்க இயலாத நிலையில் அத்தியாவசியமாகத் தேவைப்படும் பணியாளர்களை மட்டும் கொண்டு செயல்படவும் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

4 மாவட்டங்களுக்கு பொது விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

தலைமைச் செயலாளரின் அறிவுறுத்தல்: சென்னையில் 12 மணி நேரத்துக்கும் மேலாக கனமழை தொடர்வதால் பொதுமக்கள் முடிந்தவரை வீட்டிலேயே பத்திரமாக இருக்கும்படி தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா கேட்டுக் கொண்டுள்ளார். மேலும், ”சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 3 மாவட்டங்களில் 1000க்கும் மேற்பட்ட நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இன்று காலை மட்டுமே 2 லட்சத்துக்கும் மேற்பட்ட உணவுப் பொட்டலங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. அரசு முழுவீச்சில் இயங்கிக் கொண்டிருக்கிறது” என்றார்.

அதேபோல், புயல், மழை நிலவரம் சீராகும் வரை மக்கள் வீடுகளிலேயே இருக்கும்படி தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவுறுத்தியுள்ளார்.புயல் நிலவரம் தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து கவனித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE