தமிழகத்தில் அரசு பள்ளி மாணவிகளுக்கு தற்காப்பு கலை பயிற்சியளிக்க ரூ.20 கோடி நிதி ஒதுக்கீடு

By செய்திப்பிரிவு

சென்னை: ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியின் மாநில திட்ட இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை விவரம்:

மத்திய கல்வி அமைச்சகம் அறிவுத்தியுள்ள ராணி லட்சுமிபாய் தற்காப்பு கலை பயிற்சி திட்டத்தின் கீழ் 2015 முதல் அரசுப் பள்ளி மாணவிகளுக்கு தற்காப்பு பயிற்சி வழங்கப்படுகிறது. அதன்படி நடப்பு கல்வியாண்டுக்கான (2023–24) பயிற்சிக்காக 6,941 நடுநிலைப் பள்ளிகளுக்கு ரூ.10.41 கோடி நிதியானது திட்ட இயக்குநரகம் ஒதுக்கீடு செய்துள்ளது. அதேபோல் 6,267 உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் தற்காப்பு பயிற்சிக்காக ரூ.9.4 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிதியை பயன்படுத்தி மாணவிகளுக்கு கராத்தே, ஜூடோ, சிலம்பம் உட்பட பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட வேண்டும். பயிற்சியாளர்கள் சம்பளம் மற்றும் மாணவிகளுக்கான சிற்றுண்டி செலவீனத்தை வழங்கப்பட்டுள்ள நிதி மூலம் மேற்கொள்ள வேண்டும். தற்காப்பு கலை பயிற்சியாளர்களை பள்ளி மேலாண்மைக் குழுக்களே தேர்வு செய்ய வேண்டும்.

மேலும், பெண் ஆசிரியைகள் மேற்பார்வையில் இந்த பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட வேண்டும். இந்த பயிற்சியில் விடுதிகளில் தங்கி படிக்கும் மாணவிகளுக்கு முன்னுரிமை தரவேண்டும். குறிப்பாக மாணவிகளுக்கு கையில் எளிதில் கிடைக்கும் பென்சில், பேனா ஆகிய பொருட்களை கொண்டு தற்காத்துக் கொள்வது தொடர்பாக பயிற்சியில் கற்றுதர வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE