மிக்ஜாம் புயல் | இதுவரை 11 நிவாரண முகாம்களில் 685 பேர் தங்கவைப்பு: முதல்வர் ஸ்டாலின் தகவல்

By செய்திப்பிரிவு

சென்னை: "சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் 2 கோடியே 44 லட்சம் பொதுமக்களுக்கு பொதுவான எச்சரிக்கை குறுஞ்செய்திகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் பாதிப்புக்குள்ளான இடங்களில் இருந்து 685 நபர்கள் 11 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்" என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் இன்று ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது: "கடந்த டிச.1 மற்றும் டிச.2 ஆம் தேதிகளில் அரசு உயர் அலுவலர்கள், சென்னை மாநகராட்சியின் அலுவலர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர்கள் ஆகியோருக்கு நான் ஏற்கெனவே அறிவுரை வழங்கியிருக்கிறேன்.

அந்த அடிப்படையில், 121 பல்நோக்கு பாதுகாப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 4,967 இதர பாதுகாப்பு மையங்களில் பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளில் இருந்து வரக்கூடிய மக்களை முன்கூட்டியே அழைத்துவந்து தங்க வைக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவள்ளூர், கடலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் சென்னை மாவட்டங்களில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக, தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையினர் 350 வீரர்கள் கொண்ட 14 குழுக்கள், தேசிய பேரிடர் மீட்புப் படையினர் 225 வீரர்கள் கொண்ட 9 குழுக்கள் தயார் நிலையில் உள்ளனர்.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் 2 கோடியே 44 லட்சம் பொதுமக்களுக்கு பொதுவான எச்சரிக்கை குறுஞ்செய்திகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கடலோர மாவட்டங்களில் உள்ள 437 முன்னெச்சரிக்கை அமைப்புகளின் மூலம், மீனவர்களுக்கும், பொது மக்களுக்கும் தொடர்ந்து எச்சரிக்கை செய்திகள் அனுப்பப்படுகின்றன. அதிலும் மீனவர்களுக்கு முன்கூட்டியே எச்சரிக்கை செய்திகள் அனுப்பிவைக்கப்பட்டது. இதன்மூலம் அனைத்து படகுகளுக்கும் ஒரு பாதுகாப்பான ஒரு சூழலை உருவாக்கியிருக்கிறோம்.

புயல் மற்றும் கனமழை குறித்து பொதுமக்களுக்கு தொடர்ந்து ஊடகங்கள் மூலம் தொடர்ந்து செய்திகளை வெளியிட்டு வருகிறோம். புயலின் தாக்கத்தில் இருந்து பாதுகாத்துக்கொள்ள பொதுமக்கள் செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை குறித்தும் தொடர்ந்து எச்சரிக்கை வெளியிட்டு வருகிறோம். திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் பாதிப்புக்குள்ளான இடங்களில் இருந்து 685 நபர்கள் 11 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மழை எச்சரிக்கை உள்ள மாவட்டங்களில் கண்காணிப்பு அலுவலர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முழு வீச்சில் மேற்கொண்டு வருகிறார்கள். மாநில அவசரகால செயல்பாட்டு மையம், பெருநகர சென்னை மாநகராட்சியின் ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம், மின்துறை உட்பட அனைத்து கட்டுப்பாட்டு அறைகளும் 24 மணி நேரமும் இயங்கிக் கொண்டிருக்கின்றன.

பொதுமக்களுக்கு நான் சொல்லிக்கொள்வது, புயலின் காரணமாக பலத்த காற்றுடன் அதிகனமழை பெய்யும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது. இதனால், மின்கம்பங்கள், மின் கம்பிகள், மரங்கள் விழுவதற்கான வாய்ப்புகள் இருப்பதால், பொதுமக்கள் தேவை இல்லாமல் வெளியில் வருவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். தேவைப்பட்டால் மாவட்ட நிர்வாகம், மாநகராட்சியின் அறிவுரையின் பேரில் நிவாரண முகாம்களில் தங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். அங்க அனைத்து வசதிகளும் செய்துதர உத்தரவிடப்பட்டிருக்கிறது.

சென்னையைப் பொறுத்தவரை, அமைச்சர்கள் கே.என்.நேரு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, மா.சுப்பிரமணியன், சேகர்பாபு ஆகியோர் பணியாற்றிக் கொண்டிருக்கின்றனர். செங்கல்பட்டு மாவட்டத்தில் அமைச்சர் தா.மோ.அன்பரசன், திருவள்ளூர் மாவட்டத்தில் அமைச்சர் மூர்த்தி, காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைச்சர் முத்துசாமி, ராணிப்பேட்டை மாவட்டத்தில் அமைச்சர் காந்தி ஆகியோர் முன்னெச்சரிக்கை மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். அதோடு, ஆங்காங்கே இருக்கும் மக்களவை உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், மக்கள் பிரதிநிதிகள் ஆகியோர் மக்களுக்கு என்னென்ன பணிகளை செய்ய வேண்டுமோ அதை அவர்களும் மேற்கொண்டு வருகின்றனர்.

அனைத்துப் பணியாளர்களும் இரவுபகல் பாராமல் கடந்த 3 நாட்களாக பெய்துவரும் கனமழையிலும் மிக சிறப்பாக பணியாற்றி வருகிறார்கள். அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அதேபோல், வரும் இரண்டு நாட்களுக்கும், பாதிப்பு ஏற்படும் பகுதிகளை சீரமைக்க அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்ற வேண்டும் என்று அவர்களை கேட்டுக் கொள்கிறேன். ஊடகங்களும் அரசின் செயல்பாடுகளுக்கு துணைநிற்க வேண்டும் என்றும் நான் கேட்டுக்கொள்கிறேன்" என்று அவர் கூறினார். முழுமையாக வாசிக்க > மக்கள் தேவையின்றி வெளியில் வருவதை தவிர்க்க வேண்டும்: தமிழக அரசின் அலர்ட் குறிப்புகள்

அப்போது எதிர்க்கட்சித் தலைவர் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், "நான் அரசியல் பேச விரும்பவில்லை. முதலில் மக்களை பாதுகாக்க வேண்டும். நாங்கள் மக்களை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறோம். எனவே, அவர்கள் கூறும் அரசியல் நையாண்டிக்கும், கேள்விகளுக்கும் நான் விளக்கம் அளிக்க தயாராக இல்லை" என்றார்.மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகள் குறித்த கேள்விக்கு, அந்தப் பணிகளும் நடந்து கொண்டுதான் இருக்கிறது.

அந்தப் பணிகளும் ஒருபக்கம் நடந்து வருகிறது. புதிதாக மழைநீர் வடிகால்கள் அமைத்திருக்கிறோம். பழைய மழைநீர் வடிகால்களில் ஒருசில இடங்களில் அடைப்பு இருக்கலாம், அவற்றை சரிசெய்யும் பணிகளும் ஒருபுறம் நடந்துகொண்டே இருக்கிறது" என்றார். புயல் காரணமாக தேங்கும் மழைநீரை அகற்றுவது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், "அவசியம் ஏற்படும் பகுதிகள் மட்டுமல்ல, எங்கெல்லாம் மழைநீர் பாதிப்பு ஏற்படுமோ அந்தப் பகுதியில் எல்லாம் மழைநீரை அகற்ற தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது" என்று அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

19 hours ago

மேலும்