கோவை கார் வெடிப்பில் கைதான இருவரை காவலில் எடுத்து என்ஐஏ விசாரணை

By டி.ஜி.ரகுபதி 


கோவை: கோவையில் நடந்த கார் வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட இருவரை காவலில் எடுத்து என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை உக்கடம் அருகேயுள்ள, கோட்டைமேடு சங்கமேஸ்வரர் கோயில் அருகே, கடந்தாண்டு அக்டோபர் மாதம் 23-ம் தேதி அதிகாலை கார் வெடிப்புச் சம்பவம் நடந்தது. இதில் காரை ஓட்டி வந்த ஜமேஷா முபின் என்பவர் உயிரிழந்தார். முதலில் உக்கடம் போலீஸார் இவ்வழக்கை விசாரித்தனர். போலீஸாரின் விசாரணையில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் ஆதரவாளரான முபின், மக்கள் கூடும் இடத்தில் தாக்குதல் நடத்த திட்டமிட்டதும், எதிர்பாராத விதமாக காரில் இருந்த சிலிண்டர் வெடித்ததில் உயிரிழந்ததும் தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ) பிரிவுக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக முகமது தல்கா (25), முகமது அசாருதீன் (23), முகமது ரியாஸ் (27) உள்ளிட்ட 12 பேர் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர். பின்னர், உக்கடம் அன்பு நகரைச் சேர்ந்த முகமது அசாருதீன் (36), போத்தனூர் திருமலை நகர் அருகேயுள்ள, மதீனா அவென்யூ பகுதியைச் சேர்ந்த தாஹா நசீர் (27) ஆகியோரும் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர். கார் வெடிப்பு வழக்கு தொடர்பாக இதுவரை 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், கார் வெடிப்பு வழக்கு தொடர்பாக சமீபத்திய மாதங்களில் கைது செய்யப்பட்ட முகமது அசாருதீன், தாஹாநசீர் ஆகியோரை என்.ஐ.ஏ அதிகாரிகள் 6 நாட்கள் காவலில் எடுத்தனர். இதைத் தொடர்ந்து இருவரையும் என்.ஐ.ஏ அதிகாரிகள் நேற்று (டிச.2) கோவைக்கு அழைத்து வந்தனர். கோவை காவலர் பயிற்சிப் பள்ளி வளாகத்தில் உள்ள தங்களது முகாம் அலுவலகத்தில் வைத்து இன்று (டிச.3) முதல் என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

கார் வெடிப்பு வழக்கு தொடர்பாகவும், அதில் உயிரிழந்த முபின் தொடர்பாகவும், இந்த வழக்கில் அவர்களின் பங்களிப்பு என்ன என்பது தொடர்பாகவும் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். விசாரணைக்கு பின்னர், இருவரையும் அவர்களது வீடு, முன்னரே கைது செய்யப்பட்டவர்களும் இவர்களும் சந்தித்துப் பேசிய இடங்கள் உள்ளிட்டவற்றுக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE