டிச.5 காலையில் கரையைக் கடக்கும் ‘மிக்ஜாம்’ புயல் - தமிழகத்தில் எங்கெல்லாம் அதி கனமழை வாய்ப்பு?

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்து வரும் இரண்டு தினங்களுக்கு பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இன்று சென்னை, திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதி கனமழையும், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழையும், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், புதுச்சேரி, கடலூர், டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், "தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில், நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று காலை புயலாக வலுப்பெற்றுள்ளது. மிக்ஜாம் என பெயரிடப்பட்டுள்ள இந்தப் புயல், இன்று காலை 8.30 மணி நிலவரப்படி சென்னைக்கு தென்கிழக்கே சுமார் 290 கி.மீ. தொலைவில் நிலை கொண்டுள்ளது. இது தொடர்ந்து வடமேற்கு திசையில் நகர்ந்து, தீவிர புயலாக வலுபெறக்கூடும்.இது வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை (டிச.4) மாலை மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில், வடதமிழகம் தெற்கு ஆந்திர கடற்கரையை ஒட்டியுள்ள பகுதியில் நிலை கொள்ளக்கூடும். அதன்பின்னர், இது வடக்கு திசையில், தெற்கு ஆந்திர கடற்கரைக்கு இணையாக நகர்ந்து டிச.5-ம் தேதி காலை, நெல்லூருக்கும் மசூலிப்பட்டினத்துக்கும் இடையே கரையைக் கடக்கக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில், வடதமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் பரவலாக மழை பெய்துள்ளது. 32 இடங்களில் கனமழையும், இரண்டு இடங்களில் மிக கனமழையும் பெய்துள்ளது. அதிகபட்சமாக திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டில் 15 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்து வரும் இரண்டு தினங்களுக்கு பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இன்று, சென்னை, திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகனமழையும், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழையும், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், புதுச்சேரி, கடலூர், டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.

நாளை (டிச.4), திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதி கனமழையும், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழையும், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.

பலத்த காற்றுக்கான எச்சரிக்கை: இன்று, திருவள்ளூர் தொடங்கி கடலூர் வரையிலான கடலோர மாவட்டங்களின் கடற்பகுதிகளில் பலத்த தரைக் காற்றானது மணிக்கு 50 முதல் 60 கி.மீ. வேகத்திலும், அவ்வப்போது 70 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும். நாளை (டிச.4), திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் மணிக்கு 60 முதல் 70 கி.மீ. வேகத்திலும், அவ்வப்போது 80 கி.மீ வேகத்திலும் பலத்த காற்றானது வீசக்கூடும். விழுப்புரம், புதுச்சேரி மற்றும் கடலூரில், மணிக்கு 50 முதல் 60 கி.மீ. வேகத்திலும், அவ்வப்போது 70 கி.மீ வேகத்திலும் பலத்த காற்றானது வீசக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை: தென்மேற்கு வங்கக்கடல், மத்திய மேற்கு வங்கக்கடல், வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளில் கடல் கொந்தளிப்புடன் காணப்படுவதால், மீனவர்கள் டிச.5ம் தேதி வரை கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வடகிழக்குப் பருவமழையைப் பொறுத்தவரையில், தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் கடந்த அக்டோபர் 1ம் தேதி முதல் இன்று வரை பதிவான மழையின் 35 செ.மீ. இந்த காலக்கட்டத்தின் சராசரி அளவு 37 செ.மீ. இது 6 சதவீதம் இயல்பை விட குறைவு" என்று அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE