மாற்றுத் திறனாளிகள் நலனை பாதுகாக்க ஒன்றிணைந்து செயல்படுவோம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

By செய்திப்பிரிவு

சென்னை: மாற்றுத்திறனாளிகள் நலனை பாதுகாக்க ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுதொடர்பாக நேற்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினம்டிசம்பர் மாதம் 3-ம் நாள் அனைத்துநாடுகளிலும் அனுசரிக்கப்படுகிறது. மாற்றுத் திறனாளிகளின் உரிமைகளைப் பாதுகாத்து, அவர்கள் சுயமரியாதையுடன் சமுதாயத்தில் இணைந்து வாழ நாம் அனைவரும் ஒத்துழைப்பு நல்க வேண்டிய அவசியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக இந்நாள் அனுசரிக்கப்படுகிறது. நமது அரசு, மாற்றுத் திறனாளிகள் நலனுக்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் முதல்நடவடிக்கையாக மாற்றுத் திறனாளிகளின் உடல்ரீதியான குறைபாடுகளை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து தடுக்கவும், சிறப்புக் கல்வி மற்றும் தொழிற்பயிற்சி வழங்கவும், மாற்றுத் திறனாளிகளின் நலனுக்காக செயல்படுத்தப்படும் பிற நலத்திட்டங்களுக்காகவும் வழங்கப்படும் நிதியை இந்த அரசு உயர்த்திக் கொண்டே வருகிறது.

இதன்மூலம் மாற்றுத் திறனாளிகளின் சமூக, பொருளாதார வளர்ச்சிமற்றும் பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது. மாத பராமரிப்பு உதவித்தொகை ரூ.2,000 என உயர்த்தி வழங்கியும், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலமாக மறுவாழ்வு இல்லங்கள் அமைக்கும் பல புதிய முன்னெடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டும், மாற்றுத் திறனாளிகளுக்கான பாதுகாப்பு உறுதிசெய்யப்படுகின்றன. மேலும்,சமுதாயத்தில் மாற்றுத் திறனாளிகள் முழு பங்கு வகிக்கும் வகையில் பொதுக் கட்டிடங்களில் தடையற்ற சூழல் அமைத்தல், நவீன உதவி உபகரணங்கள் வழங்குதல் போன்றநடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அனைத்து மறுவாழ்வு உதவிகளும் மாற்றுத் திறனாளிகள் விருப்பத்துக்கு ஏற்றவாறு அவர்கள் வசிக்கும் இருப்பிடம் மற்றும் சமுதாயத்திலேயே கிடைக்கும் வகையில் கோட்ட அளவில் ஒருங்கிணைந்த சேவை மையங்கள் அமைக்கும் பணியும் "உரிமைகள் திட்டம்" மூலம் செயல்படுத்திட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறாக தமிழக அரசு, ஐக்கிய நாடுகள் சபையின் மூலம் உறுதி ஏற்றுள்ள, "எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும்", "சமுதாயத்தில் ஒருவரும் விடுபடக்கூடாது" போன்ற கொள்கைகளை பின்பற்றும் வகையில் செயல்பட்டு வருகிறது. எனவே, இந்த நாளில் "மாற்றுத் திறனாளிகளுக்கான நிலையான நீடித்த இலக்குகளை அடைந்திடவும், அவர்களின் நலனை பாதுகாக்கவும் நாம் ஒன்றிணைந்து செயல்படுவோம்" என அனைவரும் ஒன்றிணைந்து உறுதி ஏற்போம் என்றார்.

தலைவர்கள் வாழ்த்து: சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினத்தையொட்டி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE