பாம்பு கடித்து சிறுநீரக பாதிப்பை சந்தித்த சிறுமிக்கு சிகிச்சை அளித்து காப்பாற்றிய தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி மருத்துவர்கள்

By செய்திப்பிரிவு

தஞ்சாவூர்: பாம்பு கடித்து சிறுநீரகம் பாதிக்கப்பட்டு, உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த சிறுமிக்கு தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரியில் 27 நாட்கள் சிகிச்சை அளித்து, மருத்துவர்கள் காப்பாற்றினர்.

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்த நாடு அருகே துறையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திர போஸ் – சீலா தம்பதியர். இவர்களின் மகள் சத்திகா (10) 5-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் நவ.4-ம் தேதி வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது, அவரது இடது கையில் கண்ணாடி விரியன் பாம்பு கடித்தது. இதனால், வலியில் அலறித் துடித்த சிறுமியை பெற்றோர் மீட்டு, ஒரத்த நாடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கிருந்து, மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிறுமியை பரிசோதனை செய்த மருத்துவர்கள், சிறுமிக்கு பாம்பு கடித்ததால் ரத்தம் உறைதல் குறைபாடு மற்றும் தற்காலிக சிறுநீரக செயலிழப்பு பாதிப்பு ஏற்பட்டு, உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதைக் கண்டறிந்தனர்.

பின்னர், அந்தச் சிறுமிக்கு பாம்புக் கடி விஷ முறிவு மருத்துவம் மற்றும் டயாலிசிஸ் சிகிச்சை தொடர்ந்து அளிக்கப்பட்டது. இதன்பலனாக, 27 நாட்களுக்குப் பிறகு முழுவதுமாக குணமடைந்த சிறுமி சத்திகா நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். அவருக்கு மருத்துவக் கல்லூரி முதல்வர் ஆர்.பாலாஜி நாதன், நிலைய மருத்துவ அலுவலர் செல்வம் ஆகியோர் பழங்களை வழங்கி, அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து, சிறுமிக்கு சிகிச்சை அளித்த சிறுநீரகத் துறை தலைவர் ராஜ் குமார், மருத்துவர் கண்ணன் குழுவினருக்கு பாராட்டு தெரிவித்த முதல்வர் பாலாஜி நாதன், இது தொடர்பாக கூறியதாவது: நிகழாண்டு 10 மாதங்களில் 981 பாம்புக் கடி நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, 903 பேர் குணடைந்துள்ளனர்.

பாம்பு கடித்தால், விஷத்தை முறிப்பதற்காக கிராமங்களில் முதலுதவி என்றபெயரில் கட்டுப் போடுதல், ரத்தத்தை உறிஞ்சுதல் போன்றவற்றை செய்யக் கூடாது. அரைமணி நேரத்தில் அரசு மருத்துவமனைகளில் விஷக் கடிக்கான தடுப்பூசியை செலுத்தினால் உயிருக்கான ஆபத்தைத் தடுக்க முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE