குட்கா விற்ற கடையை விடுத்து போலியாக அமைக்கப்பட்ட கடையை மூடிய அதிகாரிகள்: காரைக்குடியில் சர்ச்சை

By செய்திப்பிரிவு

காரைக்குடி: காரைக்குடியில் குட்கா விற்றகடையை விட்டுவிட்டு, போலியாகஅமைக்கப்பட்ட கடையை உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் மூடியது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி புதிய பேருந்து நிலையத்தில் உள்ள கடையில் குட்கா விற்பதாகப் புகார் எழுந்தது. இதையடுத்து, உதவி எஸ்.பி. ஸ்டாலின்தலைமையிலான தனிப் படையினர் அங்கு சோதனை மேற்கொண்டு, குட்கா மற்றும் புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும், வழக்கும் பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், போலீஸாரின் பரிந்துரையின்பேரில், அந்தக் கடையை தற்காலிகமாக மூட உணவு பாதுகாப்புத் துறை மாவட்ட நியமன அலுவலர் பிரபாவதி, உணவுப் பாதுகாப்பு அலுவலர் வேல்முருகன் தலைமையிலான அதிகாரிகள் நேற்று சென்றனர். ஆனால் குட்கா விற்ற கடையை விட்டுவிட்டு, அருகே போலியாக அமைக்கப்பட்டிருந்த கடையை மூடினர்.

அதிகாரிகள் மூடிய கடையில் இட்லி சட்டி, அண்டா, வாளி, சிலிண்டர், அடுப்பு மட்டுமே பெயருக்கு வைக்கப்பட்டிருந்தன. மேலும், அந்தக் கடை பல மாதங்களாக செயல்படாத உணவகம் போலஇருந்தது. போலீஸார் கூறிய கடையை விட்டுவிட்டு, போலியாக அமைக்கப்பட்ட கடையை அதிகாரிகள் மூடியது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

இதுகுறித்து உணவுப் பாதுகாப்புத் துறை சிவகங்கை மாவட்டநியமன அலுவலர் பிரபாவதி கூறும்போது, ‘‘ குட்கா விற்றதாக உரிமையாளர் ஒப்புக் கொண்ட கடையைத்தான் நாங்கள் மூடினோம்’’ என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE